பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எறுழம்
ரோடோடென்ட்ரான் நீலகிரிகம்
(Rhododendron nilagirícum, Zenk.)

இதனைக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் (66) ‘எரிபுரை எறுழம்’ என்று குறிப்பிடுகின்றார். ‘எரிபுரை’ என்றதனால் இதன் மலர் நெருப்பை ஒத்தது என்பதாகும். ஐங்குறுநூற்றில் (308) ‘விரியினர்க்கால் எறுழ் ஒள்வீதாஅய்’ என இது குறிப்பிடப்படுகின்றது. இவ்வடியில் ‘ஒள்வீ’ என்பதற்கு ‘ஒளி பொருந்திய மலர்’ என்று பொருள் கோடல் பொருந்தும். இதனைப் பற்றிய வேறு குறிப்புகள் வேறு யாண்டும் காணப்படவில்லை. எனினும், இதன் மலர் நெருப்பை ஒத்தது; மலர்க் காம்புடையது; மலர்கள் கொத்தாகப் பூக்கும்; விரிந்த இதன் மலர் ஒளி வீசுவது என்ற குறிப்புகளைக் கொண்டு பார்த்தால் நீலகிரி மலையின் உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் நெருப்பை ஒத்த விரிந்த மலர்களை உடைய ரோடோடென்ட்ரான் நீலகிரிகம் எனப்படும் ஒரு சிறு மரம் இந்த எறுழமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால், இதுதான் எறுழம் என வலியுறுத்துமாறில்லை.

சங்க இலக்கியப் பெயர் : எறுழம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : எறுழ்
தாவரப் பெயர் : ரோடோடென்ட்ரான் நீலகிரிகம்
(Rhododendron nilagirícum, Zenk.)

எறுழம் இலக்கியம்

இதனைக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் ‘எரிபுரை எறுழம் சுள்ளிகூவிரம்’ (66) என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டார்.