பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

செவ்வல்லி
நிம்பேயோ ரூப்ரா
(Nymphaea rubra, Roxb.)

செவ்வல்லியும் அல்லியினத்தைச் சேர்ந்தது. இதன் இதழ்கள் எல்லாம் செந்நிறமாக இருக்கும். ‘செவ்வல்லி கொய்யாமோ’ என்பது பிற்கால இலக்கியம். இதனை ‘அரக்காம்பல்’ என்றும் கூறுவர். செந்தீயனைய செந்நிறமுடைமையின் இவ்வாம்பலை அரக்காம்பல் என்றனர். ஒரு பழனத்தில் ஒரே நேரத்தில் எண்ணற்ற இதன் மலர்கள் பூத்தன. பழனத்தில் வாழும் நீர்ப் பறவைகள், ‘பழனம் தீப்பற்றி எரிவதாக எண்ணித் தமது குஞ்சுகளை அணைத்துக் கொண்டன’ என்று கூறும் முத்தொள்ளாயிரம்.[1] இதன் ஏனைய இயல்புகள் அனைத்தும் வெள்ளாம்பலை ஒக்கும்.

மற்று, செவ்வல்லி மலரும் செங்கழுநீர் மலரும் வேறுபட்டவை.

செவ்வல்லியின் மலர் சற்று பெரியது. இதன் புறவிதழ்கள் அகத்தும் புறத்தும் செந்நிறமானவை. வெண்ணிற அல்லி மலரைப் பெரிதும் ஒத்திருத்தலின் தாவரவியலில் இதனை ‘நிம்பேயா’ என்ற பேரினத்தில் அடக்கியும் மலரில் செந்நிறத்தால் வேறுபடுதலின் ‘ரூப்ரா’ என்ற சிற்றினப் பெயர் கொடுத்தும் விளக்கப் பெறுகின்றது.

வெள்ளாம்பலைப் போன்று இவ்வரக்காம்பல் மலரிலும் நறுமணம் கமழும். தாவரவியலுண்மைகள் இவ்விரண்டிற்கும் பொதுவானவை.


  1. “அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளம் தீப்பட்டதென வெரீஇ - புள்ளினம்தன்
    கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ
    நச்சிலைவேல் கோக்கோதை நாடு”
    –முத்தொள்ளாயிரம்