பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

சங்க இலக்கியத்

மேலும் ‘தளவ மலர் ததைந்தது ஓர் கானற் சிற்றாற்றயல்’-கலி. 108 : 27 என்றமையின், தளவம் முல்லை நிலத்தைச் சார்ந்தது என்பதும்,

“பூஅமல் தளவமொடு தேங்கமழ்பு கஞல
 வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று”

-குறுந் 382:3-4
“பிடவம் மலர, தளவம் நனைய
 கார்கவின் கொண்ட கானம் காணின்”
-ஐங். 499 : 1-2

என்றமையால், தளவம் கார்காலத்தில் பூக்கும் என்பதும், இதன் கொடியில் மலர்கள் நிரம்ப உண்டாகும் என்பதும், தளவ மலர் இனிய நறுமணம் உள்ளது என்பதும் அறியக் கூடும்.

தளவின் செம்முனையானது சிரல் பறவையின் வாயைப் போலச் சிவப்பாக இருக்குமென்றும், இம்முகை வண்டவிழ்ப்ப மலரும் என்றும் பேயனார் கூறுவர்.

“பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
 ஆடுசிறை வண்டவிழ்ப்ப
 பாடுசான்ற காண்கம் வாணுதலே”
-ஐங்: 447 : 2-4

ஆகவே தளவம் என்பது செம்முல்லை என்ற கூற்று ஒக்கும்.

முல்லை முகையைப் போன்று தளவத்தின் முகை அத்துணை எளிதில் விரிவதில்லை. இதன் அரும்பு போதாகிப் பிணி அவிழ்வதைக் கண்டு புலவர்கள் அங்ஙனமே கூறுவர்.

“புதல்மிசைத் தளவின் . . . . .
 ஒருங்கு பிணி அவிழ”
-அகநா. 23 : 3-4

“தளவுப் பிணி அவிழ்ந்த”-அகநா. 64 : 4

“போதவிழ் தளவமொடு”-ஐங். 412 : 2

“தளவம் பூங்கொடி அவிழ”-நற். 242 : 2

“அவிழ் தளவின் அகன் தோன்றி”-பொருந. 199

தளவ மலர்க்கொடி திருக்கடவூர் சிவன் கோயிலில் தலவிருட்சமாக வளர்க்கப்படுகிறது. இதனைப் பிச்சிப்பூங்கொடி என்று கூறுவர். இச்கொடி ஆண்டு முழுவதும் தவறாது மலர் தருகிறது என்பர்.