இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மல்லிகை
ஜாஸ்மினம் புயூபெசன்ஸ் (Jasminum pubescens,willd.)
மல்லிகை, புதர்ச் செடியாகவும் புதர்க் கொடியாகவும் வளரும் இயல்பிற்று. இது பல்லாண்டு வாழும்; முல்லையின் குடும்பத்தைச் சார்ந்தது. ஆயினும், முல்லையினின்றும் வேறுபட்ட இனம் என்று கூறலாம். மல்லிகையின் இலை, தனியிலை ஆகும். முல்லையின் இலை கூட்டு இலை ஆகும். முல்லையின் மலரைக் காட்டிலும் மல்லிகையின் மலர் சற்றுப் பருத்தது.
சங்க இலக்கியப் பெயர் | : | மல்லிகை, மல்லிகா |
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் | : | அதிரல், குளவி, மௌவல் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | மல்லிகை |
உலக வழக்குப் பெயர் | : | மல்லிகை |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் புயூபெசன்ஸ் (Jasminum pubescens,willd) |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் (Jasmin) |
மல்லிகை இலக்கியம்
சங்க இலக்கியங்களில் பரிபாடலில் மட்டுமே மல்லிகை மலர் குறிப்பிடப்படுகிறது.
“கில்லிகா என்பாள்போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலைவளாய்”-பரி. 11:105