பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

506

சங்க இலக்கியத்

“திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய
 வேலினும் வெப்ப கானம் அவன்
 கோலினும் தண்ணிய தடமென் தோளே”

-பட்டினப் 299-301


தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். அதனால், தெய்வமும் கூறிற்றிலராயினும், பாலைத் திணைக்குரிய உரிப் பொருளைக் கூறியுள்ளார். களவியல் உரையுள் பிற திணைகளுக்குள்ளவாறு போல், பாலைத் திணைக்குரிய கருப் பொருள்களைக் காணலாம். அவற்றுள் இருப்பையும், ஓமையும் மட்டுமே மரங்களாகக் கூறப்படுகின்றன. எனினும், சங்க இலக்கியத்துள் பாலை மரம் பாலைத் திணையொழுக்கத்தைக் கூறும் பாக்களில் பயிலப்படுகின்றது.

தலைமகன் பிரிதலால் மெலிவுற்ற தலைவி, தன் தோழியை நோக்கித் தன் காதலன் சென்ற பாலை நிலத்தின் நெறியை நினைத்துக் கூறுகின்றாள். ‘அங்கே புல்லிய இலையை உடைய ஓமை மரங்களும், பாலை மரங்களும் வளர்ந்துள்ளன. அந்நெறியில், அங்குமிங்குமாகப் புலி வழங்குகின்றது. காற்றடிக்கும் வேகத்தில், பாலை மரத்தின் இலைகள் உதிர்ந்து விட்டன. அதன் பட்டையை உரித்து யானை தின்று விட்டது. அதனால், அடிமரம் வெள்ளியதாகக் காணப்படுகின்றது. அது வெள்ளிய பூக்களைக் கொண்ட பூங்கொத்துக்களை உடையது; காய்களும் உள்ளன. குறடு போன்ற அதன் காய்கள் காற்றில் அலைக்கப்பட்டு ஒலிக்கின்றன. அவ்வொலி மலையினின்றும் விழுகின்ற அருவியின் ஒலியை ஒத்துள்ளது’ என்று கூறுகிறாள்.

“பிடி பிளந்திட்ட நாரில் வெண்கோட்டுக்
 கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலை
 செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம்
 கல்இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்”
-நற். 107 : 2-5

இந்நற்றிணைப் பாடலைக் கொண்டுதான் பாலை மரத்தின் இயல்புகளைக் கூர்ந்து அறிந்து, இதன் தாவரவியல் பெயரை அறுதியிட முடிகிறது. சங்க இலக்கியத்தில் இவ்வொரு பாடலில்தான், பாலை மரத்தின் காய்கள் குறடு போல்வன என்று கூறப்படுகின்றது. இப்பாடல், பாலைத் திணைக்குரிய உரிப் பொருளைக் கூறுவதன்றி, பாலைத் திணைக்குரிய ஓமை மரத்தையும் குறிப்பிடுகின்றது. ஆகவே, இப்பாடலில் பாலைத் திணைக்குரிய பாலை மரமும் இங்குப் பேசப்படுவதைக் காணலாம். இலக்கியப் பூப்பந்தல் எனத் தகும் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் ‘தில்லை பாலை