பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

குரீஇப்பூளை
ஏர்வா லனாட்டா (Aerva lanata, Juss.)

குரீஇப்பூளை இலக்கியம்

கபிலர் குறிஞ்சிப் பாட்டில், சிறுபூளைச் செடியைக் ‘குரீஇப் பூளை’ என்று குறிப்பிடுகின்றார்.

“குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி”-குறிஞ். 72

‘வேறுபல்பூளையொடு’ என வரும் பட்டினப் பாலைச் சொற்றொடருக்கு (235) நச்சினார்க்கினியர் ‘சிறுபூளையும், பெரும்பூளையும் உண்மையின், வேறு பல்பூளை என்றார்’ என விரித்துரை செய்கின்றார்.

‘சிறுபூளை’ என்பது ஒரு சிறிய செடி. செடி முழுவதும் மிக நுண்ணிய வெண்ணிற மலர்கள் இருக்கும். கண்ணில் ஒதுங்கும் கசடு, பீளை, பூளை எனப்படும். சிறு பூளையின் மலர் இதனை ஒத்து இருத்தலின் இதனைக் ‘கண் பீளை’ என்றுங் கூறுவர்.

குரீஇப்பூளை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே (Monochlamydeae) (புல்லிவட்டமும், அல்லிவட்டமும் இணைந்துள்ளன.)
தாவரக் குடும்பம் : அமராண்டேசி (Amarantaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஏர்வா (Aerva)