பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

691

இது பொதுவாகக் கார்காலத்தில் பூக்குமாயினும், ‘வம்ப மாரியைக் கார் என மதித்துக் காலமல்லாக் காலத்தில் மலரும் பிடவம், கொன்றை முதலியவற்றைப் போல இதுவும் வேறு காலங்களிலும் பூக்கும் மடமை உடையது’ என்கிறார் இளந்திரையனார்.

“. . . . . . . . கமஞ்சூல் மாமழை
 பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
 கார்என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வுஇல
 பிடவமும், கொன்றையும், கோடலும்
 மடவ ஆகலின் மலர்ந்தன பலவே”
-நற். 99 : 6-10

இது நன்கு மலர்ந்து நிற்கும் நிலையில், இதன் வெள்ளிய இதழ்கள் அடியிலிருந்து விரிந்து, ஒவ்வோர் இதழும் வளைந்து, கீழ் நோக்கிக் கவிந்திருக்கும். அதன் அடியில் உள்ள மகரந்தக் கால்கள் தாது உகுத்து விட்டுக் கம்பிகள் போல நீண்டிருக்கும். மலரின் நடுவிலிருக்கும் சூல்முடி நீண்டு குடைக் காம்பு போலக் காணப்படும். இப்போது கோடல் மலர் ஒரு வெண்கொற்றக் குடை வடிவில் காட்சி தரும். ஆகவே, வெண்கோடலின் முகை துடுப்புப் போலவும், போதாகி மலருங்கால், பாம்பு போலவும், இதழ்கள் விரிந்தவுடன் கை விரல்கள் போலவும், தனித்த இதழ்கள் உடைந்து போன சங்கு வளையல் போலவும் காட்சி தரும் எனக் கணிமேதாவியார் கோடல் பூவுக்கு இலக்கணங் கூறுகின்றார்.

“வண்துடுப்பாய்ப் பாம்பாய், விரலாய், வளைமுறியாய்
 வெண்குடையாம் தண்கோடல்”
[1]

இவ்வுண்மையை ஆசிரியர் நல்லந்துவனார் மூன்றாகச் சுருக்கி வலியுறுத்துகின்றார்.

“கொடியியலார் கைபோல் குவிந்த முகை
 அரவுஉடன் றவை போல் விரிந்தகுலை
 குடை விரிந்தவை போலக் கோலுமலர்”

பரி. 20 : 98-100


கோடல மலரின் மணம் கருதியும், எழில் நோக்கியும், பல்வகை ஆடவரும், மகளிரும் இதனைத் தனியாகவும், கண்ணியாகவும், கோதையாகவும் புனைந்து சூடினர். இதனை

“கோடல் நீடிதழ்க் கண்ணி” -நெடுநல். 5-6



  1. திணை. மா. நூ. 119 : 3-4