பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



132) அவனது தமிழ்ப் பற்று நன்கு புலனாகின்றது. பண்டைச் சோழர்கள் தனித் தமிழையே வளமுற வளர்த்தனர். பிற்காலச் சோழர் பல்லவராட்சியிற் பட்டுப் பிறமொழியை மிகுதியாக வழங்கினர். கி.பி. 750-ல் சோழநாடு பல்லவர்பாற்பட்டது. பல்லவர்கள் வடமொழியார்வத்தால் கோயிற்பூசனையில் அதனை நிலைநிறுத்தினர். அவரது ஆட்சியில் மதச்செயல்களே மல்கின. மதங்கருதிவந்த சமணர் முதலாயினோரும், 7, 8-ம் நூற்றாண்டுகளில் தமிழை வளம்படுத்தினர். விசயாலயனுக்குப் பின்வந்த ஆதித்தசோழன் காலத்தும் பராந்தக சோழன் காலத்தும் தேவாரத் திருமுறைகளைக் கோயில்களிற் பாடற்கேற்ற செவ்வியளிக்கப் பட்டிருந்தது. பின்னர் முதலாம் இராசராச சோழ தேவரால் சைவத்திருமுறைகளிற் பதினொன்றும் கண்டு முறைப்படுத்தப் பெற்றன. இவன் காலத்துக் கண்டராதித்த சோழதேவரும், அவருடைய மனைவியார் செம்பியன்மாதேவியாரும் தமிழுடன் சமயத் தொண்டிலீடுபட்டுச் சைவத்திருமுறைகளை யெங்கும் பரப்பினார்கள். இக்காலத்தே இராசராசேசுவர நாடகம், இராசராசவிசயம் ஆகிய தமிழ் நூல்கள் தோன்றின. இராசராசன் மகனும் பண்டிதசோழனும் ஆகிய கங்கைகொண்ட சோழன் காலத்தில் கருவூர்த்தேவர் என்பவர் திருவிசைப்பாவினைப் பாடியுள்ளார். இவன் காலமுதற்கொண்டு முதற்குலோத்துங்கன் காலம்வரை மேலைச் சாளுக்கியரோடு சோழர்கள் ஓயாது போர்புரிய வேண்டியிருந்தமையால் புதிதாக நூல்கள் தோன்றுவதற்கியை பில்லாமற் போயிற்று. வீரராசேந்திர சோழன் காலத்து அவ்வரசன் வேண்டுகோட்கொண்டு பொன்பத்திக் காவலன் புத்த மித்திரன் என்ற ஆசிரியர் 'வீரசோழியம்' என்ற இலக்கணநூலை இயற்றினார். தமிழில் ஐந்திலக்கணம் அமைந்த நூலாக முதன் முதற்றோன்றியது. இந்நூலேயாம். அன்றியும் இவன் காலத்துத் திருவாரூரில் வாழ்ந்த புலவரொருவரால் வீரசோழ அணுக்க விசயம் என்ற இலக்கிய நூலுமியற்றப்பெற்றது. பின்னர் வந்த முதற் குலோத்துங்க சோழன் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மும்மொழியினும் வல்லவன். இவன் தன் அம்மானாகிய வீரராசேந்திர சோழனது உதவியைப் பெற்றான். இவன் காலத்துப் புலவராய சயங்கொண்டார் இவனது கலிங்கத்து வெற்றியைக் கலிங்கத்துப்பரணியாற் பலபடப் பாராட்டியுள்ளார். இவர் சோழரது பெருந் திறலையும் பிற உயர்பண்புகளையும் அந்நூலின் இராச பாரம்பரியத்திற் கூறியுள்ளார். கம்பருக்குப்பின் கவிச்சக்கரவர்த்தியென்ற பட்டத்தைப் பெற்றவர் இவ்ரே. இவர் பாடிய பரணியை ஒட்டக்கூத்தர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் பாடற்கரும்பரணி தேடற்கருங்கவி எனப் பாராட்டியதோடு இவரைக் கவிச் சக்கரவர்த்தி யென்றும் புகழ்ந்து போற்றுகின்றார். விக்கிரம சோழன் ஆட்சியில் கூத்தர் இளம் புலவராக இருந்தார். இவர் அவனது ஆறாவதாட்சியாண்டில் 'விக்கிரம சோழனுலா' வைப் பாடியிருத்தல் வேண்டும். இவனால் பூந்தோட்டத்திற்