பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



57 12. கோவிந்தபுத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள் கோவிந்தபுத்தூர் என்பது திருச்சிராப்பள்ளி சில்லா உடையார்பாளையம் தாலுக்காவிலுள்ள ஒரு சிவத்தலமாகும். இது கும்பகோணத்திற்கு வடமேற்கில் ஐந்து மைல் தூரத்திலுள்ள திருப்புறம்பயத்திற்கு வடமேற்கே மூன்றுமைல் தூரத்தில் கொள்ளிடப்பேராற்றின் வடகரையில் இருக்கின்றது. இவ்வூரிலுள்ள சிவாலயம் திருவிசயமங்கை என்னும் பெயருடையதாகும். இது சைவசமயாசாரியராகிய திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் பாடப்பெற்ற பெருமையும் பழமையும் வாய்ந்தது; பாண்டுவின் மகனாகிய பார்த்தனால் பூசிக்கப் பெற்றமையின் இஃது இப்பெயரெய்திற்று என்பது 'பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்துவேண்டு நல் வரங்கொள் விசைய மங்கை - ஆண்ட வன்னடி யே நினைந்தாசையாற்காண்ட லேகருத் தாகியிருப்பனே' என்னும் ஆளுடைய அரசினது திருப்பாடாலால் நன்குபுலப்படுகின்றது. கோவந்தபுத்தூர் என்பது இக்காலத்தில் கோவிந்த புத்தூர் என்று வழங்குகின்றது. அத்தலத்தில் கோ வந்து பூசித்த காரணம் பற்றி அஃது அப்பெயர் எய்தியது போலும். இவ்வரலாறு அக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில் அமைக்கப்பெற்றுள்ள சுதைப்படிமங்களால் விளங்குகின்றது. அன்றியும், கொள்ளிடக்கரைக் கோவிந்த புத்தூரில் - வெள்விடைக் கருள்செய் விசயமங்கை - உள்ளிடத்துறை கின்றவுருத்திரன் - கிள்ளி டத்தலை யற்றத யனுக்கே' என்னும் தேவாரப்பாடலும் ஈண்டு ஆராய்ந்தற்குரியதாகும். கோவந்த புத்தூரும் அவ்வூரிலுள்ள சிவாலயமாகிய திரு விசயமங்கையும் வெவ்வேறு தலங்கள் என்றும் அவற்றுள் கோவந்தபுத்தூர் வைப்புத்தலம் என்றும் திருவிசயமங்கை பாடல் பெற்றதலம் என்றும் கருதி வந்தனர். கோவந்தபுத்தூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு ஒரு சிவராத்திரியில் அவ்வூர்க்குச் சென்றிருந்தேன். அப்போது அங்குள்ள திருக்கோயில் பல கல்வெட்டுக்கள் நிறைந்த பழைமை வாய்ந்த கற்றளியாகக் காணப்பட்டது. அக்கல்வெட்டுக்களுள் இரண்டைப் படித்துப் பார்த்த போது அத்திருக்கோயில் விசயமங்கலம், விசயமங்கை என்ற பெயருடையதென்பது இனிது வெளியாயிற்று. எனவே கோவிந்தபுத்தூரிலுள்ள அத்திருக்கோயில் திரு விசயமங்கை என்னும் பெயருடையதென்பது நன்குணரப்பட்டது. பிறகு அத்தலத்திற்குரிய தேவாரப் பதிகங்களையும் பெரியபுராணத்தையும் ஆராய்ந்த போது கல்வெட்டுக்கள் உணர்த்திய அவ்வரிய செய்தி அவற்றால் பெரிதும் உறுதியெய்திற்று. பின்னர் அத்திருக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களை எழுதிவந்து வெளியிட வேண்டும் என்ற விருப்பத்துடன் காலங் கருதிக்கொண்டிருந்தேன். சென்ற கோடை விடுமுறையில் சில நண்பர்களுடன் அவ்வூர்க்குச் சென்று ஒரு நாள் முழுவதும் தங்கிச் சில