6. சிறையில் கொழுக்கட்ட்ை அலிபுரம் சிறைச்சாலை அனுபவம் சாவிக்கு முற்றிலும் புதுமையாக அமைந்தது. அரசியல் கைதிகளாயிருந்தாலும் சிறைக்குள் வேலை செய்தாக வேண்டும். சிலர் சமையலறை வேலைக்குப் போனார்கள். சாவியோ நூலகத்தின் பொறுப்பைக் கேட்டு வாங்கிக் கொண்டார். புத்தகங்களை ஒழுங்காகப் பராமரிப்பது, கைதிகள் படிக்க விநியோகம் செய்வது போன்ற சுலபமான வேலைதான். இந்தச் சாக்கில் அங்குள்ள புத்தகங்கள் முழுவதையும் படித்து விடும் வாய்ப்பு சாவிக்குக் கிடைத்தது. ஜான் பான்யன் (John Banyan) எழுதிய பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (Pilgrims Progress) போன்ற பழமை மிக்க புத்தகங்களை அவர் படித்தது அலிப்பூர் சிறையில்தான். அப்போது அதே சிறையில் இருந்த கக்கன்ஜி போன்ற பெருமைக்குரிய காங்கிரஸ் தலைவர்கள் சாவியைத் தேடி வந்து புத்தகங்கள் வாங்கிப் போவார்கள். புத்தகங்கள் படிக்கும் நேரம் தவிர சங்கீதமும் கற்றுக் கொண்டார். ஆதம்பாக்கம் ராமகிருஷ்ண ஐயர் ஒரு காங்கிரஸ்காரர். இசைக்கலையில் மிகுந்த ஞானம் பெற்றவர். பத்திரிகைகளில் இசை நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்கள் எழுதியவர். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு அலிபுரம் சிறைக்கு வந்திருந்தார். சாவியின் இதயத்தில் அடக்கமாக இருந்து வந்த இசை ஆர்வம், ராமகிருஷ்ண ஐயரின் சங்கீத ஞானம் பற்றி அறிந்ததும் இவரிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டால் என்ன என்று தீவிரமாக யோசிக்க வைத்தது. 54