பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

113



'ஒங்களத்தான் தினமும் பார்க்கேனே... தொலைக்காட்சியில நீங்க நடித்து நூறு நூறு விழாக்களைக் கண்ட 'அவனோட ராத்திரிகள்'.... 'பெண் பெண்தான்' - 'ஆண் ஆண்தான்'.... 'கொலையும் செய்வாள் பத்தினி'.... 'நேற்று ராத்திரி எம்மா'... இப்படி எத்தன படங்கள்... நானா பார்க்கிறது இல்ல... அப்பாம்மா... ஒங்கள ரசிச்சுப் பார்க்கும்போது, என்னால அத ஆபாசமுன்னு சொல்ல முடியல... என்வரைக்கும் ஒதுங்கிக்குவேன்... ஒங்களோட சமூகக் கருத்துக்களும், ஒங்களைப் பற்றிய கிசுகிசுக்களும் அடிக்கடி காதுலயும் கண்ணுலயும் அடிபட்டதுண்டு. முனுசாமி என்கிற கிராமத்துப் பெயர மாற்றிக்கிட்டது. நீங்க கிராமங்களுக்கே செய்த சேவை.'

அக்னிநாத், ஒன்றும்புரியாமல் விழித்தான். சாட்டையடி கொடுத்தபடியே சிரிக்கிறாள். அழுத்தமாகப் பார்க்கிறாள்... அதுவும் நேருக்கு நேராய், கண்ணில் கண்விட்டு பேசுகிறாள்... இவள் எந்த வகையில் சேர்த்தி... அக்னிநாத் விவகாரத்திற்கு வந்தான்.

'ஆமா... நீ என்னை கட்டிக்க மாட்டேன்னு சொன்னியாம்... என்னை இங்க வரவழைச்சு என் வாயால அந்த நல்ல வார்த்தைய கேக்கத்தானே இப்படி தந்திரமாப் பேசியிருக்கே...'

'இந்தமாதிரி சினிமாத்தனங்கள் எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தாலும் வராது அத்தான், ஒங்களக் கட்டிக்க விருப்பம் இல்ல... அவ்வளவுதான்.'

'இந்தாபாரு கயல்... எனக்குப் பேரும் புகழும் இருக்குது. எட்டுப் பங்களா இருக்குது. கறுப்புப் பணமே கோடி தேறும்... நல்லா யோசித்து பாரு... அப்புறமா வருத்தப்படாதே... என்ன இல்ல என்னிடத்தில்?... நிறைவாவே இருக்கேன்...'

'நீங்க சொல்ற நிறைவுகள், எனக்கு குறைவுகளாத் தெரியலாம் இல்லியா...'

'அப்போ எவனயாவது காதலிக்கிறியா?... அதையாவது சொல்லு... நானே அவனுக்குக் கட்டி வைக்கிறேன்...'

'இதுவரைக்கும் இல்ல...'