பக்கம்:சிந்தனையாளன் மாக்கியவெல்லி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஏழ்மை

நான் ஓர் ஏழை; அதுவே என்விசுவாசத்திற்கும் கண்ணியத்திற்கும் அத்தாட்சியாகும்.

கஷ்டம்

ஒரு கஷ்டத்தைச் சமாளிக்க இன்னொரு கஷ்டத்தில் சிக்கிக் கொள்ள நேரிடுவது இயற்கைதான். ஆனால், இரண்டு கஷ்டங்களில் எதில் துயரம் குறைவோ அதை நல்ல வழியாகக் கைக்கொள்ள வேண்டும்.

காதல்

காதல், மக்களின் இதயங்களிலே சிறகடித்துப் பறக்கும் போது, அதைக் கட்டி வைக்கவோ அதன் இறக்கைகளைப் பிணைத்துப் பிடித்து வைக்கவோ முயலுபவர்களைத் தான் அது பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறது.

சிறு குழந்தையைப் போலவும், அடிக்கொரு நினைப்புமாகவும் உள்ள அந்தக் காதல், அவர்கள் கண்களையும், இருதயங்களையும் அவர்களுடைய முதுகெலும்பையுங்கூடப் பிடுங்கியெடுத்து விடுகிறது.

காதலை விரும்பி, அதன் போக்குப்படி யெல்லாம் போகவிட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். அது தங்களை விட்டு பறந்து போகும் போது அவர்கள் அதைப்போக விட்டுவிடுகிறார்கள். அது திரும்பி வரும்போது அதை மறுபடியும் ஆனந்தத்துடன் வரவேற்றுக் கொள்கிறார்கள்.

காலப்போக்கு

காலத்திற்கும் சூழ் நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள்கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.

காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுகின்றவன் இன்பமாகவும், காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான்.

குடியரசு

குடியரசில் உரிமையை நிலை நிறுத்தக் குற்றஞ்சாட்டும் வாய்ப்பு இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

கோட்டை

குடிமக்கள் அன்பின் மீது எழுப்பப்படுகிற கோட்டை தான் உண்மையில் சிறந்த கோட்டை!