பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி நலன்கள் 227

சீறடியில் தொடங்கித் தலைமுடி வரை கூறுகிறார். இதனைப் பாதாதி கேச வருணனை என்பர். மற்றும் இதே முறை வைப்பினைக் கடலாடு காதையில் அமைத்திருப்பது காண முடிகிறது. மாதவி கால்விரல் தொடங்கித் தலை முடி வரை அணியும் அணிவகைகளை விவரிக்கிறார். இதிலும் இம்முறை வைப்பைக் காண முடிகிறது. இதுவும் முறை வைப்பு அணி எனக் கொள்ளலாம்.

இந்திர விழாவில் கண்ணகி கருங்கண்ணும் மாதவி செங்கண்ணும் இடம் வலம் துடித்தன என்பர். கருமை செம்மை என்பன முரண் தொடையாகும். இடம் துடித்தல் வலம் துடித்தல் இவையும் முரண் நயம் ஆகும்.

கோவலன் கொலை உண்டான்;புண்ணுமிழ் குருதியோடு மண் மீது கிடக்கிறான் அவன்; கண்ணகி படுகளம் வந்து விடும் கண்ணிர் நம் நெஞ்சைத் தொடுகிறது.

அன்று காலையில் அவள் அவன் தலை முடியில் இருந்த மலர்க் கொத்தைத் தன் தலையில் சூடிக் கொண்டாள். மாலை தவழும் மார்பினனாகத் திகழ்ந்தவன் மாலைப் பொழுதில் மாறுபட்டுக் காணப்படுகிறான். குருதி படிந்து அவன் மார்பினைச் சிவக்க வைத்துள்ளது. பூ இதழ் படிந்த மார்பில் குருதிக் கறை படிந்து கிடக்கிறது. இதனை அவள் சுட்டிக் காட்டுகிறாள்.

'வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற்

கொண்டாள் தழிஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்தாழ் குருதி புறம் சோர மாலைவாய்க் கண்டாள் அவன் தன்னைக் காணாக் கடுந்துயரம்'

இரு வேறு காட்சிகள். காலையில் அவன் அவளைத் தழுவினாள்; மாலையில் இவள் அவனைத் தழுவுகிறாள். பூவுடன் கண்ட மார்பு பொலிவு பெற்றிருந்தது; வடுக் கொண்ட மார்பு நலிவு பெற்றுக் கிடக்குது. இந்த இருவேறு காட்சிகள் முரண்பாட்டைக் காட்டுகின்றன.

எல்லாம் முடிந்துவிட்டது. மதுரையை எரித்துவிட்டாள். அடுத்துச் செய்வது யாது? எங்கே போவது? திக்குத் தெரியாத திடரில் அவள் நிலை குலைந்து நிற்கிறாள்.