பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 துன்ப மாலை

அவளுக்கு விளங்கியது; அணி அதை ஏந்திச் சென்றது தன் கணவன்; அவனைத்தான் அவர்கள் கொலை செய்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து சீற்றம் கொண்டாள். எழுந்தாள்; செய்வது அறியாது மயங்கி விழுந்தாள். விரித்த கூந்தலோடு அத் திங்கள் முகத்தினள் நிலத்தில் விழுந்து அலறினாள். செங்கண்சிவக்க அழுதாள்: "எங்கே இருக்கின்றாய்?' என்று கூறி இனைந்து ஏங்கி மயங்கினாள்.

நெஞ்சில் நினைவுகள் அலைமோதின, உணர்வுகள் பொங்கி நெருப்பு எனச் சொற்களாக வெளிப்பட்டன. அநியாயம் அது என்பதை அலறி அறிவித்தாள். விதவைக் கோலம் கொண்டு ஒடுங்கிக் கிடப்பது இது பழையது; எரியில் விழுந்து கரிவது இதுவும் பழகியது; இவற்றை எதிர்த்தாள், பிழை செய்தது அரசன், கொடுமை இழைத்தது அவன்; இதனைத் தாங்கித் தணிந்து இருப்பது இயலாது என்று கூறிக் கொதித்து எழுந்தாள். அதனை எதிர்க்காமல் இருப்பது தனக்கு வசை என்பதை உணர்ந்தாள்.

பழிச்சொல்லைப் போக்குவது தன் கடமை என்பதை அறிந்தாள். இது அவள் உள்ளத்தில் எழுந்தபோராட்டம்.

இதைப் பலரும் அறிய வெளியிட்டாள்; "கள்வனோ என் கணவன்?' என்று ஆயர் மகளிரை நோக்கி வினவினாள். காய்கதிர்ச் செல்வனை நோக்கிக் கதறினாள். 'அநியாயம் இழைத்த இந்த ஊர் அழியும். எரி எழுந்து ஊரை எரிக்கும்'. என்று ஒரு தெய்வக்குரல் எதிர் ஒலித்தது. அது அவளுக்கு ஊக்கத்தைத் தந்தது; செயல்படுத்தியது.

19. ஊரை ஒருங்குதிரட்டுதல் (ஊர் சூழ்வரி)

அந்தக் குரல் சூரியன் தந்த விடை எனக் கொண்டாள். அவ்வளவுதான்; அங்கு அவள் நிற்கவில்லை. ஆயர் சேரியை விட்டு நீங்கி ஊருக்குள் புகுந்தாள். கையில் மற்றைய சிலம்பை ஏந்தினாள் 'முறை தவறிய அரசன் ஊரில் வாழ்விர் நான் நவில்கிறேன்; கேட்பீராக” என்று குரல் கொடுத்தாள்.