பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100 சீர்திருத்தச் செம்மல்

கலப்பு மண ஆதரவு

கலப்பு மணத்திற்குப் பேராதரவு நல்குவார். பல கலப்பு மணங் களைத் தாமே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். நீலாவதி, இராம. சுப்பிரமணியம் கலப்பு மணம் செய்து கொண்ட பொழுது, வயி.சு.சண்முகனார் சிங்கப்பூரில் தங்கியிருந்தார். அங்கிருந்தே அக்கலப்பு மணத்திற்கு வாழ்த்துத் தந்தி விடுத்திருந்தார்.

செல்வர் நீலாவதி இராமசுப்பிரமணியம் திருமணம் உறுதியான சீர்திருத்தத் திருமண மாகும். வாழ்த்துகிறேன்.

வயி.சு. ஷண்முகம் பத்துப்பகாட், சிங்கப்பூர், 15-10-1930

கலப்பு மணத்தில் - சீர்திருத்தத் திருமணத்தில் சண்முகனார் எத்தகைய உறுதியான பற்று வைத்திருந்தார் என்ற உண்மை யை இச்செய்தி உணர்த்துகிறது.

சாதிப்பற்றின்மை

சாதிப் பற்றும் அவரிடம் கண்டதில்லை. எப்பொழுதும், 'சண்முகம்' என்று மட்டுந்தான் கையொப்பம் இடுவார். 'செட்டியார்' என்ற சாதிப் பெயரைத் தம் பெயருடன் ஒட்ட மாட்டார்.

சாதிப் பற்றின்மையால் எவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு இவரிடம் மிகுந்து காணப்பட்டது. எவரையும் அயலாகக் கருதாது, உறவினராகவே எண்ணும் பண்புள்ளம் இவரிடம் ஒளி விட்டமையை இவர்தம் நிகழ்ச்சிகள் பல எடுத்துக் காட்டும்.