பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186சீவக சிந்தாமணி



இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் அவன் சிந்தனையைத் தூண்டின; அதனால்தான் அவனுக்கு வாழ்க்கையில் விரக்தியும் வெறுப்பும் ஏற்பட்டன. இதை அவரிடம் கேட்டு விளக்கம் கேட்டான்.

“பொருளுக்கு அழிவு இல்லை; உடைமையைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டியுள்ளது. எதுவும் தனது உடைமை என்ற பற்றுள்ளம் நீங்க வேண்டும்; எதையும் நாமே வைத்துக் கொள்ள வேண்டும் எனகிற பேராசை தவறானது ஆகும்.”

“மற்றொன்று வலிமைதான் வெல்லும் என்ற நியதியை மாற்றி அனைவரும் வாழ வேண்டும் என்ற சிந்தனை தோன்ற வேண்டும். எளியோரை வலியோர் வாட்டுவது ஒழிய வேண்டும். அவரவர் உரிமையோடு வாழ வழி வேண்டும். இதுதான் இந்த நிகழ்ச்சி அறிவுறுத்துவது” என்று உணர்த்தினார்.

காதறுந்த ஊசியும் கடை வழியே வாராது காண் என்ற புலம்பலும், கடைசிவரை யாரோ என்ற கதறலும் அர்த்த மற்றவை என்பதை உணர்ந்தான்.

கொள்கைப் பிடிப்பு அவசியம் என்பதை உணர்ந்தான்; துறவு என்ற பெயரால் தப்பித்துக் கொள்ள நினைப்பது உலகத்தை ஏமாற்றுவது ஆகும். பொறுப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளச் சமயம் நெறிகள் கற்றுக் கொடுக்கின்றன என்பது தவறான கருத்தாகும்.

தன் பழைய வாழ்க்கையை எண்ணிப் பார்த்தான்.

தான் விட்டுச் செல்லும் வாழ்க்கையைத் தொடரும் தன் மதலையர் சுமைதாங்கிகள் ஆகின்றனர்; இளையதலை முறை பொறுப்புகளை ஏற்கக் காத்துக்கிடக்கின்றன. அவர்களை வாழ்த்தினான்.