இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“நாடு நமக்குச் சொந்தம்-இதில்
நம்மவர் யாவரையும்
ஆடுகள் மாடுகள்போல்-இவர்கள்
அடக்கி ஆளுவதோ ?
அந்நியர் இங்குவந்தே-நம்மை
அந்நியர் போல்நடத்த
வெந்ததே உள்ளமெல்லாம்-உடனே
வீறிட்டு நாம்எழுவோம்.”
என்றார் சிதம்பரனார்-கேட்டு
எழுந்தார் இளைஞரெல்லாம்.
கண்களைப் போன்றதுவாம்-விடுதலை
காணத் துடித்தனராம்.
வங்காளி பங்கிம்சந்த்ரர்-சொன்ன
‘வந்தே மாதரமே’
எங்கும் ஒலித்ததுவாம்-கேட்டே
எதிரிகள் சீறினராம்.
பாட்டுக்கள் பாடியுமே-நமது
பாரதி மக்களுக்கே
ஊட்டினர் தேசபக்தி-வீர
உணர்ச்சியும் பொங்கியதாம்.