பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

செந்தமிழ் பெட்டகம்


எழுந்த நாடகங்களில் மூன்று பிரகரணங்கள் சிறப்புற்றனவாய்க் குறிக்கத் தக்கவை. அவை : விசாகதத்தன் எழுதிய தேவி சந்திரகுப்தம், பவபூதி எழுதிய மாலதி மாதவம், பிரமயசஸ் சுவாமி எழுதிய புஷ்ப தூஷிதகம் ஆகியவை. விசாகதத்தன் கி.பி. 6-8 ஆம் நூற்றாண்டுகளில் இருந்திருக்கலாம். விசாகதத்த கவியின் நாடகங்களுள் முத்திராராட்சஸம் ஒன்றே அழியாமல் நம்மிடையில் உலவி வருகிறது. ஆனால், இக்கவி அபிசாரிகா வஞ்சிதகம், தேவிசந்திர குப்தம் என்று வேறிரண்டு நாடகங்கள் எழுதியதாயும் மேற்கோள்களிலிருந்து தெரிகிறது. பின் சொன்ன தேவி சந்திரகுப்தத்தின் பல பகுதிகள் நாடக இலக்கண நூல்களில் காணப்படும். இவைகளிலிருந்து இந்நாடகத்திலும் விசாகதத்தன் அரசியல் சிக்கல்களில் ஏற்படும் நிகழ்ச்சியதிசயங்களைக் கையாளுவதில் தனக்கிருந்த ஆர்வத்தைக் காண்பிக்கிறான்.

இந்திய வரலாற்றில் இரண்டாம் சாகசாங்கன், விக்கிரமாதித்தன் என்று புகழ் பெற்ற குப்த மன்னனான சந்திரகுப்தனைப் பற்றி இது காறும் வரலாற்றாராய்ச்சிக்கு கிட்டாத அவனடைய சுய வாழ்க்கையையும் நடத்தையையும் பற்றிய அருஞ் செய்தி இங்கே தரப்படுகிறது; சந்திரகுப்தனுக்கு முன் அவன் தமையன் ராம குப்தன் அரசனாயிருந்தான்; ராம குப்தன் துர்ப்பலன். அப்போது சகத்தலைவன் ஒருவன் அவனைத் தாக்கி, அவன் மனைவி துருவதேவியைத் தந்தால் சமாதானத்திற்கு வருவேன் என, ராமகுப்தன் மந்திரிகளைக் கலந்து கொண்டு, நாட்டின் நலனைக் குறித்து இந்த அவமானமான சமாதானத்தை ஏற்றுக்கொள்கிறான்.

குலத்திற்கு வந்த அபகீர்த்திக்காக வீரனான தம்பி சந்திரகுப்தன் தவித்து, எப்படி சகபதியை நீக்குவதெனச் சூழ்ந்து, தன் அண்ணன் மனைவி போல் அவளாடைகளைப் புனைந்து கொண்டு, படைவீரர் களையும் பெண்களைப் போல் உடனழைத்துச் சென்று அவனைக்