பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

செம்மொழிப் புதையல்


காட்டும் பொருள்களின் ஆக்க அமைதிகட்கு உரிய காரணத்தை (ஆக்கமும் அமைதியும் ஏன் உண்டாயின எனக் காணும் காட்சியால் அறிதற்கெழும் உரிய காரணத்தை) நோக்கும் நிலையில் நாம் இருத்தலால் அவர் கருத்தை ஏற்கின்றோமில்லை. நீர் எப்படி யுண்டாகிறதென விஞ்ஞானத்தைக் கேட்பின், அஃது இரு கூறு நீர்க்காற்றும், ஒரு கூறு நெருப்புக்காற்றும் கூடி நீருண்டாகிறது என்றும்; இவ்வாறு ஏன் உண்டாக வேண்டும் என்றால், விஞ்ஞானம் விடை தராது.

பொருள்களின் ஆக்க அமைதிகண்டு ஏன் என்னாது எப்படியென வினாவிச் சேரல் விஞ்ஞானத்தின் குறிப்பு. எப்படி யென்னாது ஏன் என வினாவிச் செல்வது தத்துவ ஞானத்தின் குறிப்பாகும். இதனை மேனாட்டார் மெய்யியல் (Philosophy) என்பர். விஞ்ஞான தத்துவ ஞானமும் தத்தமக்குரிய எல்லைக் கண் நிற்குமாயின், உண்மை யறிவு விளக்கமுறும், இவ்விரு ஞானங்களும் தம்முள் மாறுகொண்டு ஒன்றனையொன்று கெடுத்தற்கே முயன்றுள்ளன. உலக வரலாறு காண்போர், தத்துவ ஞானத்தின் செல்வாக்கால் விஞ்ஞானிகள் பலர் பெருங்கேட்டுக் குள்ளாகியதைக் காண்பர். விஞ்ஞானிகள் பலர் நாடு கடத்தப்பட்டதும், உயிர்க்கொலை செய்யப்பட்டதும் வரலாற்று நூல் வாய்விட்டரற்றுகிறது. கால வேறுபாட்டால் தத்துவஞானம் செல்வாக்குக் குறையலுற்றதும், விஞ்ஞானம் செல்வாக்குற்றுத் தத்துவஞான எல்லைக்குள் புகுவதாயிற்று, தன்னெல்லைக்குட் படாத செம்பொருளை விஞ்ஞானம் தேடியாராய்ந்து “அற்புதமோ சிவனருளோ அறியேன்” என அலமருகிறது.

தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் வேறு வேறு குறிப்பின வாயினும், தத்துவ ஞானத்துக்கு விஞ்ஞானமும் இன்றி யமையாது வேண்டப்படும். உண்மை வழிநின்று கடவுளுண்மை காணும் நெறி, தத்துவ ஞான நெறியின் வயப்பட்டு இயலுவது. ஆதலால், தத்துவ ஞானியொருவர் ஒன்றனைப்பற்றிப் பேச வருமுன் அது பற்றி விஞ்ஞானி யாது கூறுகின்றார் என்பதை முதற்கண் காண்டல் வேண்டும் என்பர். ஒரு பொருளின் ஆக்கம் எங்ஙன மாயிற்றென்பது கண்டால் அஃது அங்ஙனம் ஏன் ஆயிற்றெனக் காணுமாற்றால் உண்மைத் தன்மை யுணால் கூடும் என்று சர். ஜேம்ஸ் ஜீன்ஸ் (Sir James Jeans) என்பார் கூறுகின்றார். விஞ்ஞானக் காட்சியிற் செல்லுமிடத்து மிக்க விழிப்போடு செல்லவேண்டும். சிறிது அயர்ந்தவிடத்து, விஞ்ஞானம் தத்துவஞான எல்லைக்குட் புகுந்து மயக்கத்திற்-