சுந்தரர் 113 இளைஞர்க்கு ஒரு செல்வம் பெரியபுராண வரலாறுகளை வரிசைப்படுத்திப் பேசுவது இந்நூலின் நோக்கம் அன்று. பல்வேறு வரலாறுகளில் காணப்பெறும் நிகழ்ச்சிகளில் இன்றைய சமுதாயத்திற்கு, அச்சமுதாயம் உயர் வதற்குத் தேவையான பகுதிகள் இருப்பின், அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டுவதே இந்நூலின் நோக்கம். ஆதலால், அடியவர்களின் வரலாறுகள் வரிசையாக இங்கு இடம் பெறா. சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று நம்மால் அழைக்கப் பெறும் பெருமகனாராகிய நம்பி ஆரூரர், ஒவ்வொரு தலமாக வணங்கிக்கொண்டு திருவதிகை வீரட்டானம் வருகிறார். அந்நிலையில், தமக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்த நாவுக்கரசர் பெருமானின் நினைவு வருகிறது. அப்பெருமான், முதன்முதலாக இறை அருளைப் பெற்று, குறிக்கோள் இலாத தமிழ்ச் சமுதாயத்தை கைதுக்கிவிடப் புறப்பட்ட முதலாவது இடம் திருவதிகை வீரட்டானம் ஆகும். அவ்வூரிலும், அத் திருக் கோயிலிலும்தான் நாவரசர் பெருமான் உழவாரத் தொண்டு செய்தார். இறையருளைப் பரிபூரணமாகப் பெற்ற மகான்கள்கூடத் தாங்கள் வாழும் இச்சமுதாயத்தையும் இம்மக்களையும் மறந்ததில்லை. அப்பர் பெருமானைப்பற்றி நினைவுகூர்ந்த சுந்தரர் என்ன செய்தார் என்பதை தெய்வப்புலவர் பின்வரும் பாடலில் குறிக்கின்றார்,