பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

95

பார்த்து, அரசுவீற்றிருத்தற்குரிய இலக்கணம் நினக்கேயுண்டென்று கூற, ‘என் தமையனான செங்குட்டுவனிருப்ப நீ முறைமைகெடச் சொன்னாய்’ என்று அந்நிமித்திகனை வெகுண்டு நோக்கி, இராச்சியபாரத்தை அகலத்தள்ளிக் குணவாயிற்கோட்டத்தில் துறந்த முனிவனாய் வசித்து, தமையனான செங்குட்டுவனது ஆட்சியுரிமைக்குக் கேடுவாராதபடி மோக்ஷ சாம்ராஜ்யத்தை ஆள நிற்கும் வேந்தனல்லையோ , நீ” என்று, முன்னிகழ்ந்ததும் இனி நிகழ்வதுமாகிய என்னுடைய வரலாறுகளையும் உரைத்தருளினாள். இங்ஙனமுரைத்த இமையோரிளங்கொடியாகிய கண்ணகியின் பெருமைதங்கிய இச் சரிதத்தை விளங்கக்கேட்ட செல்வமிக்க நல்லோர்களே!

“பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின்
ஊனூண் றெமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானஞ் செய்ம்மின் தவம்பல தாங்குமின்
செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோ ரவைக்கள மகலா தணுகுமின்
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை யஞ்சுமின் பிழையுயி ரோம்புமின்
அறமனை காமி னல்லவை கடிமின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விராகினி லொழியின்
இளமையுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

மல்லன்மா ஞாலத்து வாழ்வீரீங்கென.”