பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடு

115

றாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இப்போது மைசூரிராஜ்யத்துள் ஒரு பகுதியாக அடங்கும். இதனை இச்சேரன் வென்றான் என்றதற்கேற்பப், பழைய சாஸனமொன்று, கொடுகூர் நாட்டைச் சேரமானுக்குரிமை கூறிச் செல்கின்றது.[1] அன்றியும், மைசூரின் பெரும்பகுதி சேரநாடாயிருந்ததென்று வேறு சாஸனங்களாலும் விளங்குதலால்,[2] முற்காலத்தே சேரதேசம் அதிகவிஸ்தீரணம் பெற்றிருந்ததாகவே கொள்ளலாம். இத்தேசத்துள்ளே, மேற்குமலைத்தொடர்ச்சிக்கு உள்ளடங்கிய மலைநாட்டில் செங்குட்டுவனுக்கும் உரிமையுண்டாயினும், அதன் பெரும்பகுதியை அவன் ஞாதியரசர் ஆண்டு வந்தனரென்பது முன்னரே குறிப்பிட்டோம். ஆயினும், நம் சேரனுக்குவழங்கிய செங்குட்டுவன் என்ற பெயர்க்கேற்பக்கொள்ளுமிடத்துக் குட்டநாடு[3] இவனாட்சிக்குட்பட்டதாகச்சொல்லல் பொருந்தும். இதுபற்றிப்போலும், அக்குட்ட நாட்டிற்குள் அடங்கிய பேரியாற்றுக்கு மலைவளங் காண்டல் வேண்டிச் செங்குட்டுவன் சென்றிருந்த தூஉம் என்க. ஆயின், அப்பேரியாறு சங்கமமாகுமிடத்தமைந்த முசிறி என்னும் கடற்கரைப்பட்டினம் நம் சேரனைச் சேர்ந்ததாதல் வேண்டும். இம் முசிறி அந்நிய தேசங்களுடன் ‘ஏற்றுமதி’ ‘இறக்குமதி’ச் சம்பந்தம் பெற்றுப் பழையகாலத்தில் மிகப் பிரசித்திபெற்றிருந்தது.



  1. இந்நூல் 29-ம் பக்கத்துக் கீழ்க்குறிப்புப் பார்க்க.
  2. DR. Fleets History of Deccan. p. 189.
  3. இது, கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று ; இன்றும் இப்பெயருடன் வழங்குகின்றது; கோட்டயத்துக்கும் கொல்லத்துக்குமிடையில், பாலையாற்றாற் பல ஏரிகளும் தீவுகளுமுடையதாகி இப்பிரதேசமிருத்தலால் ‘குட்டநாடு’ என வழங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.