பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சரிதநிகழ்ச்சிகள்.

39

இங்ஙனம் புகுதலும், பொற்கொல்லர் நூற்றுவர் தன் பின்வர மிக்க ஆடம்பரத்துடன் வருகின்ற பொற்கொல்லர் தலைவனைக் கோவலன் கண்டு ‘இவன் அரசனாற் பெயர்பெற்றவன் போலும்’ என்றெண்ணி அவனருகிற்சென்று, “அரசன்தேவி அணிதற்குத் தகுதியான சிலம்பொன்றை விலை மதித்தற்கு நீ தகுதியுடையையோ” என்று அவனை யுசாவ, அக்கொல்லனும் மிக்கபணிவுடன் தான் வல்லனாதலைக் குறிப்பிக்க, கோவலன் தான்கொணர்ந்த சிலம்பினை அவனிடங் காட்டினன். அவன் பார்த்து, ‘இதனை அரசனுக்கு நான் தெரிவித்து வருமளவும் இவ்விடத்தே நீவிர் இரும்’ என்று ஓரிடத்தைக் கோவலனுக்குக் காட்டிச் சென்றான். சென்ற பொற்கொல்லன், முன்பு அரசன்மனையுள் சிலம்பொன்றை வஞ்சித்துத் திருடிக்கொண்டவனாதலால், ‘யான் கவர்ந்த சிலம்பு என்னிடத்தே யுள்ளது என்று அரசன் அறிதற்கு முன்னே அதனோடொத்த சிலம்பைக் கொணர்ந்த இப்புதியவனால் என்மீதுண்டாகும் ஐயத்தைப் போக்கிக்கொள்வேன்’ என்று தனக்குள்ளே சூழ்ந்து, அரண்மனையையடைந்து, காம பரவசனாய் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பாண்டியனைக்கண்டு வணங்கி—‘அரசே! கன்னக்கோல் முதலியவையில்லாமலே அரண்மனையுள்ளிருந்த சிலம்பைத் திருடியகள்வன் அடியேனுடைய மனையில் வந்திருக்கிறான்’ என்று சொல்ல, பாண்டியன் உடனே காவலாளரை அழைத்து, ‘என் மனைவியின் சிலம்பு இவன்கூறிய கள்வன் கையிடத்ததாயின் அவனைக் கொன்று ‘அச்சிலம்பைக் கொணருதிர்’ என்று ஆராய்ச்சியின்றியே கட்டளையிட்டனன். பொற்கொல்லன் தனதெண்ணம் பலித்ததென்று அகமகிழ்ந்து அக்காவலாளர்களுடன் சென்று கோவலனையடைந்து அவனை நோக்கி,