இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சைவ சமய சாரம்
திருச்சிற்றம்பலம்
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற்
சிவகதி விளையு மன்றே–அப்பர்
திருச்சிற்றம்பலம்
காலம்
உலகத்திலே பல சமயங்கள் நிலவுகின்றன. அவைகளுள் பெரும்பான்மையன கால தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பன. கிறிஸ்துவம், பௌத்தம் முதலிய பல சமயங்கள் தோன்றிய காலங்களைச் சரித்திரங்கள் கிளந்து கூறுகின்றன. சைவ சமயம் சரித்திரக் காலத்தைக் கடந்து நிற்பது. சைவ சமயம் இன்ன காலத்தில் இன்னவரால் உண்டாக்கப்பட்டதென்று எவராலும் எந்நூலாலும் அளந்து கூறல் முடியாது. அஃதொரு காலத்தில் மன்பதைக்குரிய சமயமாகவும் பயன்பட்டு வந்தது.