பக்கம்:சொன்னார்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92


நான் முதன் முதலில் சென்னைக்குச் சென்ற பொழுது அங்குள்ளவர்கள் இசை உணர்ச்சி இல்லாதவர்கள் என்று தெளிவாகி விட்டது. தமிழ் நாட்டில்தான் மேளம், இசை அல்லது பரதநாட்டியம் இருக்கின்றன. பிற பாஷைகளில் கிடையாதெனச் சிலர் நினைக்கலாம். தமிழ் நாகரிகம் உலகம் முழுமையும் பரவி இருந்ததற்கும் போதிய சான்றுகள் பலவுள. பண்பாடு என்பது தமிழில்தான் உண்டு. அதன் கவிதை உயர் நோக்கங்கள் இவைகள் தெலுங்கு பாஷையில் கிடையாது.

— ரசிகமணி டி கே. சிதம்பரநாத முதலியார் (25-10-1911)

(தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)

மனைவி, ஒரு நல்ல நிதிமந்திரி, எங்கிருந்தோ பணம் வந்து குவியப் போகிறது என்று மனக்கோட்டை கட்டாமல், கணவனின் வரவுக்குத் தக்கபடி செலவு செய்கிறாள். தன்னுடைய மக்களுக்குக் கல்யாணப் பேச்சு நடத்துகிறாள். இந்த விஷயத்தில் மனைவி நிதிமந்திரி மட்டுமல்ல, சரியான உள்நாட்டு மந்திரி கூட.

— வி. வி. கிரி (29.6.1960)


சித்தூரிலிருந்து 30, 40 மைல் தள்ளி ஒரு கிராமத்தில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது. அந்தக் கிராமத்தில் போய் இறங்கியவுடனேயே, ஒரு கள்ளுக் கடையின் முன்னல் உருக்கமாகத் தேசியப் பாடல்களைப் பாடினேன். நான் பாடிக் கொண்டிருந்த போதே கள்ளுக் கடையிலிருந்து ஒருவன் வெளியே வந்து, வாயில் இருந்த கள்ளை என் முகத்தில் காறித் துப்பிவிட்டான். அப்படியும் விடவில்லை நான். அவன் காலில் விழுந்து, குடிப்பதை விடும்படி வேண்டினேன். அன்று மறியல் செய்துவிட்டு நான் சித்தூர் திரும்பியபோது என் மனைவி சித்தூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் இறந்து கிடந்தாள்.

— சித்தூர் வி. நாகையா (13-1-1972)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/94&oldid=1077444" இலிருந்து மீள்விக்கப்பட்டது