பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

சொன்னால் நம்பமாட்டீர்கள்


தமாஷாகப் பேசி உற்சாகமூட்டிக் கொண்டிருப்பதில் வல்லவர் பிறருக்கு எந்தத் தீங்கும் நினைக்காத நல்லவர்.

எங்களையெல்லாம் போலீஸ் கமிஷனர் முன் ஆஜர் செய்தார்கள். முதலில் என் பெயரைச்சொன்னதும் நான் கமிஷனர் எதிரில் நின்றேன். அப்போது கமிஷனராக இருந்தவர் திரு. அருள் அவர்கள் என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகை செய்துவிட்டு ஏதோ எழுதப்போனார். நான் உடனே “சார்” எழுதும்போது பி. கிளாஸ் போட்டு எழுதுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் உள்ளேபோய் வேறு போராட வேண்டியதிருக்கும்.” என்றேன்.

“பி-கிளாஸ் போடுகிறேன்” என்று சொல்லி சிரித்துக் கொண்டேஎழுதினார். எழுதி முடித்ததும் “சரி நீங்கள்போகலாம்” என்றார். -

“சார் இன்னொரு விஷயம்” என்றேன் “என்ன?” என்றார்.

“இப்போது மணி ஒன்று. எங்களைச் சிறைக்குள் கொண்டு போகும்போது மணி நான்காகிவிடும் சிறையில் சடங்குகள் முடிந்து எங்கள் அறைகளுக்குச் செல்லும்போது மணி ஆறாகலாம்.

ஆகவே நாங்கள் இப்போது சாப்பிடாமல் சிறைக்குச் சென்றால் இன்று பூரா பட்டினி கிடக்க நேரிடும். அதனால் எங்கள் எல்லோருக்கும் நல்ல சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றேன். கமிஷனர், சிரித்துக் கொண்டே “எத்தனை முறை சிறைக்குச் சென்றிருக்கிறீர்கள்?“ என்றார்.

“நான்கு” ஐந்து முறை சென்றிருக்கிறேன்” என்றேன். “அதனால் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சரி நீங்கள் போகலாம்” என்று சொல்லி எங்களுடன் வந்த சார்ஜண்டைக் கூப்பிட்டு தன்கைப்பணத்தை (ரூ.200) கொடுத்து நல்ல சாப்பாடு போட்டு பிறகு ஜெயிலுக்குக் கொண்டு போகும்படி உத்தரவிட்டார்.