பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

சொன்னால் நம்பமாட்டீர்கள்


தலைவர்களும் ஊழியர்களும் பெரும்பாலோர் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைச்சாலையில் இருந்தார்கள்.

ராஜாஜி அவர்கள் ஆகஸ்ட் புரட்சியை ஆதரிக்காததினால் அவர் மட்டும் வெளியில் இருந்தார் கட்சி வேலைகளோ அரசியல் வேலைகளோ எதுவும் இல்லாததினால் இலக்கியத்தில் மனதை செலுத்திக் கொண்டு இருந்தார். அதனால் நான் தமிழ்ப்பண்ணை ஆரம்பித்தது அவருக்கு ஒரு வாய்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆகவே தினம் தினம் தமிழ்ப் பண்ணைக்கு வந்து சிறிது நேரம் புத்தகங்களின் நடுவில் பொழுதுபோக்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

தினம் தினம் ராஜாஜி அவர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றதனால் பல உயர்ந்த விஷயங்களை அவரிடம் அப்போதைக்கப்போது நான் கற்றுக் கொள்ள ஏதுவாக இருந்தது. திடீரென்று ஒருநாள் ராஜாஜி அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நான் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டு இருந்தேன்.

ராஜாஜி வந்தது அறிந்ததும் வேகமாக கை அலம்பி விட்டு ஓடி வந்தேன். அதற்குள் ராஜாஜி நான் சிற்றுண்டி அருந்தும் இடத்திற்கு வந்துவிட்டார். பாதி சாப்பிட்டதுடன் எனக்காக எழுந்திருக்க வேண்டாம். உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று சொன்னார்.

தாங்களும் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுவேன் என்று அடக்கமாகப் பதில் கூறினேன்.

“செட்டி நாட்டு இட்லி பூப்போல் இருக்கும் என்று சொல்வார்களே. உங்கள் வீட்டு இட்லி எப்படி இருக்கும். இரண்டு கொடுங்கள்” என்று சொன்னார்.