பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

28


பெரியாரின் தொண்டனாக இருந்தே இந்த எழுத்துப் பணியினை நிறைவேற்றியுள்ளேன்.

சென்னை வானொலி நிலையத்தில் 17-9-1978-ல் “பெரியார் ஈ.வெ.ரா. வின் சமுதாய சீர்திருத்தப் பணிகள்” என்ற தலைப்பில் 4 நிமிடங்கள்; 9-5-1979-ல் “பெரியாரின் இதயப் பாங்கு” எனுந்தலைப்பில் 12 நிமிடங்கள் பேசவும்; 24-12-1979-ல் “பெரியார் கண்ட சமுதாயம்” என்கிற தலைப்பின் கீழ் 20 நிமிடங்கள் கலந்துரையாடவும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. (வானொலிக்கு நன்றி) தஞ்சையில், திராவிடர் கழகம் நடத்திய பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவின் முதல் நாள், 15-9-1979 அன்று, என் முன்னிலையில் கவியரங்கம் நடைபெற்றது.

அச்சுக்குப்போகும் வரையில் “தந்தை பெரியார்” நூலின் கையெழுத்துப் பிரதிகளை நான் யாருக்கும் காட்ட விரும்பவில்லை. எனக்கு அய்யமேற்படுங்கால், நினைவாற்றல் மிக்க நண்பர் என்.எஸ். சம்பந்தம் அவர்கள் துணையை நாடினேன். அவரும் மனம் உவந்து உதவினார். அச்சாகத் தொடங்கியதும், காகிதம் ஒரேமாதிரி கிடைக்காத பிரச்சனை. காத்திருப்பதால் பயனில்லை என்று கிடைத்த காகிதத்தில் அச்சியற்றினேன்.

அய்யாவின் அழகான transparency படம் ஒன்றை என் அருமை நண்பர் வழங்கினார். அதை முகப்பாக வைத்துத், தமது திறமையான ஓவியக் கோலங்களால், அட்டையினை அலங்கரித்திட, ஓவிய நிபுணரும் என் இனிய நண்பருமான கோபுலு கனிவு காட்டினார். அனுபவசாலிகளான சில நல்ல தோழர்கள் - அவர்கள் பெயரைக் குறிப்பிடுவது அவர்களுக்கே தீங்காக முடியலாம்! - அவ்வப்போது ஏற்ற யோசனைகள் அளித்தனர்.

எழுத்தாளரும் அச்சக உரிமையாளருமான அன்பர் ஜி.டி. முத்து, இதை அவர் சொந்தப் பணியாகவே ஏற்றுத் துவக்கமுதல் தொண்டாற்றினார். கனரா பிரிண்டர்சார் மேலட்டையினை அழகுற அச்சிட்டனர். இவர்களுக்கெல்லாம் “நன்றி” என்ற மூன்றெழுத்தால் என் உள்ள உணர்வுகளை வெளியிட ஒல்லுமா?

இன்றைக்கு நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றிலும் பெரியாரை ஆய்வு செய்வதால், வரலாற்றில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் (Factual errors) வந்துவிடாமலிருக்க அதிகக் கவனம் செலுத்தினேன். என்னைமீறி ஏதாவது குற்றங்குறைகள் தவறுகள் பிழைகள் இருப்பின், அன்பர்கள் சுட்டிக்காட்டினால், வணங்கி ஏற்றுக்கொள்வேன்.

வணக்கம்.

எஸ். கருணானந்தம்.
24-12-1979