பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

52



இராமசாமி, தான் இந்தக் கையெழுத்தைப் போடவில்லை என்று சொல்லிவிட்டால், தப்பித்துக் கொள்ளலாம்; அது ஒன்றுதான் வழி; என்று அவர்கள் ஆலோசனை கூறினர்! ஆனால் ஈ.வெ. இராமசாமி, பிடிவாதமாகப் பொய் கூற மறுத்து, வருவது வரட்டுமெனச், சிறை வாழ்க்கைக்கு ஒத்திகை பார்க்கத் தொடங்கி விட்டார்! அதாவது, தன் காப்பு, கொலுசு, கடுக்கன் முதலிய நகைகளைக் கழற்றிவிட்டுச் சவரம் செய்து கொள்ளாமல் கேழ்வரகுக் களி சாப்பிட்டுத், தலையணையில்லாமல், வெறும் பாயில் படுத்துப் பழகி வந்தார்.

இரண்டு மாதங்கழித்துத், திருச்சியில் உதவி கலெக்டரான ஆங்கில இளைஞர் ஒருவர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்து விட்டது. பிரபல வியாபாரியானதால், வழக்கு விசாரணையை வேடிக்கை பார்க்க, நீதிமன்றத்தில் நிறையக் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரசு வழக்குரைஞரான கணபதி ‘அய்யர், பெரிய கலெக்டரிடம் அனுமதி பெற்று, ஈ.வெ. ராமசாமிக்காக வழக்காட வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞராகிய இராமசாமியின் தோள்மீது கைபோட்டபடி, உள்ளே நுழைகிறார். உதவி கலெக்டர், கணபதி. அய்யரைப் பார்த்து விவரம் விசாரிக்கிறார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இராமசாமியையும் கேட்கிறார். தகப்பனாருக்காகத், தானே வியாபார விஷயங்களைக் கவனிப்பதால், வயதான அவருக்காகத், கையெழுத்துப்போட்டதாக, ஒத்துக் கொள்கிறார். வெங்கட்ட நாயக்கரும், அச்சத்துடன் ஆமோதிக்கிறார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. காரணம், இராமசாமி, யாரையும் மோசடி செய்யும் கருத்தோடு இந்தக் கையெழுத்தைப் போடவில்லை; உண்மையை ஒத்துக்கொண்டார் என்பதால்! எப்படியோ உண்மை வென்று விட்டதல்லவா? இந்தச் சம்பவத்தால், வாலிப நிலையிலும் வாய்மையாளராக விளங்கிய நேர்மை தெரிகிறதே!