பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

ஊரும் பேரும்


காரணத்தால் சிறுத்தொண்டர் என்று சைவ உலகம் அவரைப் போற்றுவதாயிற்று.நெல்லை நாட்டிலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் என்னும் சிற்றூர் அவர் பெருமையை நினைவூட்டுகின்றது.

சண்டேச்சுரர்

சண்டேச்சுர நாயனார், சிவாலயத்திற் சிறப்பாகப் போற்றப்படும் சிவனடியார்களுள் ஒருவர். சிவ வழிபாட்டிற்கு இடையூறு செய்த தந்தையை மழுவால் எறிந்து, “அரனார் மகனார்” ஆகிய அப்பெருமானைச் . சண்டேச்சுரர் என்றும், தண்டேச்சுரர் என்றும் சைவ உலகம் வணங்கு கின்றது. அவர் பெயரால் அமைந்த ஊர் தண்டேச்சுர நல்லூர், அது சிதம்பர வட்டத்திலுள்ளது.

சோமாசிமாறன்

இன்னும், திருத்தொண்டர் புராணத்தில் பேசப்படுகின்ற சிவனடியார்களில் ஒருவர் சோமாசிமாற நாயனார். அவர் திரு அம்பர் நகரத்து மறையவர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் வாக்கால் தெரிகின்றது.128 அன்னார் பெயரைக் கொண்ட சோமாசி என்ற ஊர் இராம நாதபுரத்துப் பரமக்குடி வட்டத்தில் உள்ளது.

தமிழ் நாட்டில் ஆன்றோர் பிறந்த ஊர்கள் சிறந்த தலங்களாக மதிக்கப் பெற்றன. பாடல் பெற்ற தலங்களைப் போலவே அவ்வூர்ப் பெயர்களில் திரு என்னும் அடை விளங்கக் காணலாம்.

திருவாதவூரர் திருநாவுக்கரசர்

சைவர்கள் தலைக்கொண்டு போற்றும் பெருமை சான்றது திருவாசகம். அதனை அருளிச் செய்தவர்