பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

249

அமைந்த திருக்கோயிலே குரக்குத்தளி என்பது சாசனங் களால் விளங்கும்.5 இக்காலத்தில் சர்க்கார் பெரிய பாளையம் என்னும் பெயர் பெற்றுள்ள முகுந்தனுரில் காணப்படும் பழைய சிவாலயமே குரக்குத்தளியாகும். அங்கு வானரத் தலைவனாகிய சுக்கிரீவன் ஈசனை வழிபட்டான் என்பது ஐதிகமாதலின், சுக்கிரீவேஸ்வரர் கோயில் என்ற பெயர் அதற்கு அமைந்துள்ளது.6

ஈசனார்க்குரிய பள்ளிகளுள் சிலவற்றைத் தொகுத் துரைத்தார் திருநாவுக்கரசர்.

“சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
செழுநனி பள்ளி தவப்பள்ளி சீரார் பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத் திணிதாகப் பாலிப் பாரே”

என்னும் பாசுரத்திற் கண்ட பள்ளிகளைத் தமிழ்ப் பாடல்களாலும் சாசனங்களாலும் ஒருவாறு அறிந்து கொள்ளலாகும்.

சிரப்பள்ளி

பண்டைச் சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே நின்ற குன்றில் அமர்ந்த ஈசனைச் ‘சிராப் பள்ளிக் குன்றுடையான் என்று சிரப்பள்ளி பாடினார், திருஞான சம்பந்தர். அக் குன்றம் சிரகிரி எனவும் வழங்கப்பெற்றது.

“தாயும் தந்தையும் ஆனோய், சிரகிரித்
தாயு மான தயாபர மூர்த்தியே”

என்று தாயுமானவர் சிரகிரிப் பெருமானைப் பாடித் தொழுதார். எனவே, சிரகிரியில் அமைந்த பள்ளியைத் திருநாவுக்கரசர் சிரப்பள்ளி எனக் குறித்தார் என்று