பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

ஊரும் பேரும்


என்னும் தேவாரத்தில் பெண்ணையாற்றங்கரை யிலமைந்த திருமுண்டீச்சுரத்தின் அழகும், அங்குச் சிவலோகநாதன் காட்சி தரும் கோலமும் நன்கு விளங்குகின்றன.இந்நாளில் முண்டீச்சுரம் சிவலோகநாதர் கோவில் என்றே வழங்குகின்றது. அக்கோவிலைத் தன்னகத்தே யுடைய ஊர் முன்னாளில் முடியூர் என்று பெயர் பெற்றிருந்தது. 14 பராந்தக சோழன் காலத்தில் அது பராந்தக சதுர்வேதி மங்கலம் எனவும் வழங்கியதாகத் தெரிகின்றது. முடியூர் என்ற தமிழ்ப் பெயர் பிற்காலத்தில் மெளளி கிராமம் என வட மொழியில் வழங்கப்பெற்ற தென்பதும், அப்பெயர் கிராமம் எனக் குறுகிற் றென்பதும், சாசனங்களால் விளங்கு வனவாகும். எனவே, பாடல் பெற்ற திருமுண்டீச்சுரம், கிராமம் என்ற ஊரிலுள்ள திருக்கோயில் என்பது தெளிவுறுகின்றது. தென்னார்க்காட்டுத் திருக்கோயிலுர் வட்டத்தி லுள்ளது இப் பழம்பதி.

முக்கீச்சுரம்

சோழ நாட்டின் பழைய நகரமாகிய உறையூரில் முக்கீச்சுரம் என்னும் திருக்கோயில் விளங்கிற்று. தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபடும் பெருமை சான்ற முக்கீச்சுரத்தைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர்.

“சீரினால் அங்கொளிர் தென்னவன்
செம்பியன் வில்லவன்
சேரும் முக்கீச்சரத் தடிகள்
செய்கின் றதோர் செம்மையே”