பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ஊரும் பேரும்

வீரன் மாற்றார் விடுத்த அம்புகளைத் தன் நெடுங் கரத்தால் பிடித்து முரித்தான். அச்செயல் கண்டு வியந்த படைத் தலைவன், அவ்வீரனுக்குக் கணை முரித்தான் என்ற பட்டம் அளித்தான். மற்றொரு வீரன் மாற்றார் பொழிந்த சரமாரியைக் கண்டும் அச்சமென்பது சிறிதுமின்றி மலை போன்ற மார்பில் அம்புகளைத் தாங்கி நின்றான். அவ்வீரச் செயலை வியந்து அவனைச் சரந்தாங்கி என்று சீராட்டினார்கள். இவ்விரு பட்டங்களும் பாண்டி நாட்டில் ஊர்ப் பெயராக வழங்கு கின்றன. மலை தாங்கி என்னும் பெயருடைய ஊர் ஒன்று சேலம் நாட்டிலே காணப்படுகின்றது.

நாட்டில் அவ்வப்போது தலைகாட்டிய கலகங் களையும், குழப்பங்களையும் அடக்கி, அரசருக்கும் குடிகளுக்கும் நலம் புரிந்த வீரர்களும் உயரிய பட்டம் பெற்று விளங்கினர். உள் நாட்டுக் கலகத்தை ஒடுக்கிய ஒரு வீரனை அமர் அடக்கி என்றும், கொடுமை விளைத்த ஒரு கூட்டத்தாரின் கொட்டத்தை ஒடுக்கிய மற்றொரு வீரனை மறம் அடக்கி என்றும் தமிழ் நாடு பாராட்டுவதாயிற்று. இவ்விரண்டு பட்டங்களும் தஞ்சை நாட்டில் ஊர்ப் பெயர்களாக இன்றும் வழங்குகின்றன.

தென்னார்க்காட்டில் உலகங் காத்தான் என்பது ஓர் ஊரின் பெயர். கானாடு காத்தான் என்பதும், மானங்காத்தான் என்பதும் பாண்டி நாட்டிலுள்ள ஊர்கள்.

போர்க்களத்திலும் அவைக்களத்திலும் சிறந்த சேவை செய்தவர்க்குப் பழந் தமிழ் மன்னர் ஏனாதி என்ற பட்டம் வழங்கினர். நாட்டுக்கும் அரசுக்கும் நற்றொண்டு செய்து பண்டைப் பெருமக்கள் பெற்ற அப்பட்டம் சில ஊர்ப்