புலவர் கா. கோவிந்தனார்
61
உதியஞ் சேரல் தன் நாட்டை விரிவு படுத்தியதையும், அவன் பரிசில் தரும் பெருமையினையும், -
"நாடுகண் அகற்றிய உதியஞ்சேரற்
பாடிச் சென்ற பரிசிலர்
போல உவவினி வாழி"14,
என்றும், அவன் அளிக்கும் பெருஞ்சோற்று விழாவினை,
"துறக்கம் எய்தியதொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை, இரும்பல்
கூளிச் சுற்றம் குழிஇஇருந்தாங்கு,"15
என்றும், எடுத்துக் கூறிப் பாராட்டியுள்ள மாமுலனாரே, வெண்ணியில் தோற்ற சேரலாதனையும் குறிப்பிட்டுள்ளார்16. ஆகவே, கரிகாலனோடு போரிட்டுத் தோற்று வடக்கிருந்து உயிர்விட்ட சேரவேந்தன், உதியஞ்சேரலாதனே எனக் கொள்ளுதல் பொருந்துமா என்பதை அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து துணிவார்களாக.
இக் கருத்தை, 1955ஆம் ஆண்டிலேயே, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடான, சங்க கால அரசர் வரிசை தொகுதி 1, 'சேரர்' என்ற தலைப்புள்ள என்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளேன்.17