பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பணியும் முற்றுப்பெறாது போனது. அந்தப் பணியில் அவர் எழுதி முடித்த வரலாற்றுப் படைப்புகளை தமிழக வரலாறு வரிசை என்ற பெயரில் வெளியிட முனைந்து இரண்டாம் நூலாக தமிழக வரலாறு - கோசர்கள் என்ற இந்த நுாலை தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம்.

"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே”

என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்து விட்டுச்சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும் ஆதரவினையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.

“தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப்போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப்பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்! அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ள வரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்! தமிழ் படிப்போர் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்வார்! என்பது உறுதி.

எழிலகம் பதிப்பகத்தார்.