பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சி.என். அண்ணாதுரை ரஷிய சீமானுக்காவது ஆயுதங்கள் இருந்தன! இங்கே உள்ள சிறு கும்பலுக்கு அதுவுமில்லை. ரஷிய சீமானாவது ஆயிரம் வேலி நிலமுடையோன்; ஆபரணப் பேழையுடையோன்; ஆயுதந்தாங்கிய ஏவலருடையோன் இங்குள்ள சிறு கும்பலுக்கு அவைகளுமில்லை; எனினும் ரஷிய சீமான்கள் ஆட்டி வைத்ததைவிட இங்குள்ள சிறு கும்பல் பெரும்பாலான கூட்டத்தை ஆட்டி வைக்கிறது. என்று கூறலாம். அந்த ரஷிய ஜார் கூட்டம் அழிந்ததே, அதே கதியைத்தான் இந்த அந்தஸ்துக் கூட்டமும் அடையும் என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். கேட்ட தமிழர் களித்தனர். அத்தன்மை படைத்த சிறு கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது பற்றி, எக்கட்சியைச் சார்ந்த தமிழருக்குள்ளும் கருத்து வேற்றுமை இல்லை என்பது அந்தக் கூட்டத்திற்குத் தெரியும்படி தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும். தமிழ்மொழிக்கும் கலைக்கும் ஊறு நேராதபடி பாதுகாக்க தமிழர் திரண்டு விடுவதுபோலவே. தமிழரின் தன்மானம் பறிக்கப்படும்போது தமிழர்கள் எந்தக் கட்சியினிடம் இருப்பினும், தமிழர் அணிவகுப்பில் வந்துசேர வேண்டும். தமிழரைச் சமமாக நடத்த மறுக்கும் சிறு கூட்டத்தை எதிர்க்க ஒன்றுசேர வேண்டும். தமிழ் நாட்டைப் பிற நாட்டாரோ, பிற இனத்தாரோ பங்கப்படுத்த வளங்குன்றச் செய்ய - செல்வத்தைச் சுரண்ட முற்படும் வேளைகளில் தமிழர்கள் ஒன்றாகத் திரண்டெழ வேண்டும். தமிழரின் மறுமலர்ச்சிக்கு இந்த எண்ணமே உறுதுணை. இந்த எண்ணத்துடன் தமிழர் பணியாற்றுவரேல் தமிழர் முன்னேறி விடுவர் என்பது திண்ணம். -