பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்பம்

305


இந்தாடாஉன்தாலி

திருமணமானது முதல் கணவன், தன் மனைவியின் சமையலைக் குறை கூறிக் கொண்டே வருகிறான். எவ்வளவு முயன்று, ஆர்வத்துடன் சமைத்தாலும் அவனுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. புதிய புதிய பண்டம், பணியாரங்களும், பலகாரங்களும் செய்து அவனுக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றும் தோல்வியடைகிறாள் மனைவி. அவளுடைய அன்பையும் தன்னை மகிழ்விக்க அவள் செய்யும் முயற்சியையும் அவன் உணர்ந்து பாராட்டவில்லை. 'பொறுமை ஒரு நாள் புலியாகும்" என்று பாடினான் நாட்டுக் கவிஞன் கல்யாண சுந்தரம். அதுபோல அவள் சீறுகிறாள். தாலிக் கயிற்றை அடிமை விளக்கென எண்ணுகிற கணவனைப் பார்த்து இந்தாடா உன் தாலி” என்று கூறுகிறாள். அவன் தன் பக்கம் பழமையான வழக்கங்கள் மட்டுமல்லாமல், சட்டமும், நீதியும் இருப்பதாகக் கூறுகிறான். பழைய சட்டங்கள் பெண்களை அடிமைகளாக்கி கணவனுக்கு அடங்கி வாழ்வதற்குத்தானே துணை நின்றன? அவள் வழக்கத்தை மட்டுமில்லாமல், தன்னை அடிமையாக வாழக் கட்டாயப்படுத்தும் சட்டத்தையும் மீறுவதற்கு துணிகிறாள்.


இவ்வுரையாடல், அன்பும், பாசமும், பண்பும் கணவன் மனைவி உறவில் இருவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. அவ்வாறில்லாது 'மாட்டை வசக்கித் தொழுவினில் கட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார்' என்ற நிலையில் கணவன் போக்கு இருந்தால், 'அதை வெட்டி விட்டோம் என்று கும்மியடி’ என்று பாரதியின் புதுமைப் பெண் கூறுவதைத் தற்கால உழவன் மகள் பின்பற்றுவாளா?

பெண்:
குத்தின அரிசி ஒரலிலே

கொளிச்ச அரிசி மொறத்திலே
ஆக்கின சோத்துக்கு உண்ணானம் பேசின
இந்தாடா மாமா உன்தாலி


ஆண்:
தாலி குடுத்தாலும் வாங்கமாட்டேன்

தாரங் குடுத்தாலும் வாங்கமாட்டேன்
முப்பது பணத்தை முடிச்சு கட்டினு
எப்ப வருவியோ கச்சேரிக்கு