பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386 தமிழர் நாட்டுப் பாடல்கள்

ஊராரைத் தண்டனிட்டு உழுந்து கும்பிட வந்தாயா நாட்டாரைத் தண்டனிட்டு நடுங்கிக் கும்பிட வந்தாயா

வட்டார வழக்கு: சோடித்தல்-கோர்த்து மாலையாக்குதல்; உழுந்து-விழுந்து. சேகரித்தவர்: S.S. சடையப்பன் இடம்: சக்கிலிப்பட்டி, தருமபுரி.

கள்ளன் கொண்டு போனானோ?

கொண்டையில் காதலன் பூவைத்தான். அந்தப் பூவின் பிரயாணத்தை கற்பனையில் கண்ட காதலி அவனிடமே அதனைக் கூறுகிறாள். கடைசியில் அவனைக் கோபமூட்ட, "நீ வைத்த பூவை கள்ளன் திருடி விடுவானோ?" என்று கேட்கிறாள்.

சீரான நந்தப் பூ பறிக்க வாடா சீராளா பறிச்சு வந்த நந்தப் பூ கொண்டையிலே வைத்தாயா? கொண்டையிலே வைத்த பூ படுக்கையிலே விழுந்ததா? படுக்கையிலே விழுந்த பூ குப்பையிலே போனதா? குப்பையிலே போன பூ கோழி கிளச்சுதா? கோழி கிளச்ச பூ வேலியை அணைஞ்சுதா வேலியை அணைஞ்ச பூ வெள்ளங்கொண்டு போனதா? வெள்ளங்கொண்டு போன பூவை கள்ளன் கொண்டு போனானோ?

வட்டார வழக்கு: நந்தப்பூ-நந்தியாவட்டம்; வைத்தாயா - வைத்தாயல்லவா, கிளச்சுதா-கிளறிற்றா.

சேகரித்தவர்: S.S. சடையப்பன் இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.