பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404

தமிழர்நாட்டுப் பாடல்கள்


சேத்துக் குள்ளே ஏலேலோ
செம்பகப்பூ அகிலகிலா
   செம்பகப்பூ
செம்மையாக ஜலப்பிடி சேத்தெடுக்க அகிலகிலா
   சேத்தெடுக்க
நாத்துக்குள்ளே ஏலேலோ
நச்சுப் புல்லு அகிலகிலா
   நச்சுப்புல்லு
நச்சுப் புல்லை ஜலப்பிடி
நறுக்கித் தள்ளு அகிலகிலா
   நறுக்கித் தள்ளு

உதவியவர்:

ஜானகி சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி

இடம்:

முத்துகாபட்டி,

சேலம்
கமலை-1

வறண்ட பிரதேசங்களில் பூமிக்குள் இருக்கும் தண்ணீரைக்
கிணறு வெட்டி கடின உழைப்பால் கமலையின் மூலம் வெளிக்கொணர்ந்து தோட்டப்பயிர் செய்வார்கள். கமலையென்ற தகரத்தாலான பாத்திரத்தில் தோலாலான வால் என்ற பையைக் கட்டிக் கயிற்று வடங்களை இணைத்து மர உருளைகளைப் பொருத்தி மாடுகளைப் பிணைத்து முன்னும் பின்னுமாக ஒட்டி நீர் இறைக்கவேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். அனுபவமில்லாத அவளது மச்சான் கமலை இறைக்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்டு கேலியும், அனுதாபமும் கலந்து பாடுகிறாள்.

பொட்டலிலே வீடுகட்டி
பொழுதிருக்கத் தாலிகட்டி
கருத்தக் காளை ரெண்டும் கட்டி
கமலெறைக்கப் போகும் கருத்த துரை
பொட்டலிலே கிணறு வெட்டி
போர்க்காளை ரெண்டும் கட்டி