பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப் பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம். 1. இதிகாசத் துணுக்குகள், 2. கிராம தேவதைகளின் கதைகள், 3. சமூகக் கதைகள், 4. வரலாற்றுக் கதைகள்.

இதிகாசங்கள் இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப் பொருளாகக் கொண்ட பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தைவிட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் பஞ்சபாண்டவர்களில் அர்ஜூனனும், பீமனும் மக்களுக்குத் தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்றுகிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும் மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.

அல்லியரசாணி

பாரத கதா பாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள், அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதாபாத்திரங்கள் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளுவதாக இக்கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள், அல்லி, பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அருச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அருச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன்-சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.

122