பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 தமிழர் வரலாறு

சமயங்களின் வாதிகள், ஆங்கு வாழ்ந்திருந்தனர் என்பது ஈண்டுக் குறிப்பிடப்படல் வேண்டும். பாரதப் போர் பற்றிய விளக்கத்தில், பண்டைத் தமிழ்ப் புலவர்களுக்குத் தெரியாத, அளவுக்கு மீறிய உயர்வு நவிர்ச்சி அணிக்கு இயல்புடையதாகி விட்ட சமஸ்கிருத இலக்கியச் செல்வாக்கின் அடிச்சுவடுகளைக் காணலாம். பாட்டின் ஆசிரியர், ருத்திரன் மகன் கண்ணனார், (உருத்திரங்கண்ணனார்) ஒரு பார்ப்பனர் ஆதலும், பாடற் பொருள், முன்னரே குறிப்பிட்டவாறு, இந்நூலாசிரியர் காலத்துக்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆரியமயமாக்கப்பட்டுவிட்ட காஞ்சியாம் ஆதலுமே காரணங்க ளாம். ஆகவே, ஆரியக் கொள்கைகள் இடம் பெற்றிருப்பதில், இப்பாட்டிற்கும், பழைய தொகைப் பாக்களுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டினை உணர்த்துவதற்காக, இப்பாட்டிலிருந்து, ஆரியச்சார்பான், மேலும் சில, குறிப்பீடுகளைக் காட்டுகின்றேன். ‘இளந் திரையனின் குலமுதல்வனாகவும், பரந்த இப்பேருலகை அளந்து கொண்டவனாகவும், மார்பில் அழகிய மறுவுடையனாகவும், கடல்நிறமேனியுடையவனாகவும், விஷ்ணு கூறப்பட்டுள்ளார்.

“இருநிலம் கடந்த, திருமறு மார்பின்,

முந்நீர் வண்ணன்’’. -

-பெரும்பாண் : 29-30

பிராமணர்கள் வேதம் ஓதுவது, வேள்வித்தூண் ஆகியவற்றை விளக்கும் பாட்டின் பகுதிகள், முன்னரே எடுத்துக் காட்டப்பட்டன. இளந்திரையனின் பேராற்றல் பாண்டவர் ஆற்றலோடு ஒப்பு கூறப்பட்டுளது. இளந்திரையன் அரண்மனை முற்றத்தில், திறைப் பொருள்களோடு காத்துக் கிடக்கும் அரசர்கள், தேவர்கள் வாழும் இமயமலையில், வெள்ளிய அலைகளைக் கொண்ட நீரைக் கிழித்துக் கொண்டு ஓடுதலால், ஒளிவீசும் உச்சியிலிருந்து, பொன்னைக்கொழித்துக் கொண்டு குதித்தோடிவரும், கடத்தற்கரிய கங்கையாற்றில், அப்பெருவெள்ளத்தைக் கடந்து, மறுகரைக்குச்செல்ல, அவ்