அரசியல் - வள்ளுவரும் சங்க காலமும்
115
புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றில் படையும் பிறவும் பேசப்பெறுகின்றன. அக இலக்கியங்களாகிய அகநானூறு, நற்றிணை, கலித்தொகை முதலியவற்றிலும் உவமை முகத்தானும் பிற வகையிலும் இப்படை முதலியன நன்கு காட்டப்பெறுகின்றன. இவ்வாறே அரசனுக்கு அணியாய எல்லாப் பொருள்களும் தன்மைகளும் நலன்களும் சங்க இலக்கியங்களில் காட்டப்பெறுகின்றன எனலாம்.
எத்துணைச் சிறப்புக்கள் அமைந்திருப்பினும் கட்டிக் காக்கும் நல்ல படை இன்றேல், அரசன் செயலாற்ற முடியாது என்பதை உணர்ந்தே வள்ளுவர் படையை முன் வைத்தார். அப் படையமைப்பும் அதன் திறனும் பழங்காலத்தில் எவ்வெவ்வாறு இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் பலப்பல வகைகளில் எடுத்துக் காட்டுகின்றன. அனைத்தையும் சுட்டுவது காலம், இடம் இவற்றைக் கடப்பதாகும். எனவே, ஓரிரண்டு கண்டு அமைவோம்.
“கடல்போற் றானைக் கடுங்குரல் முரசம்
காலுறு கடலின் கடிய உரற
எறிந்து சிதைந்த வாள்
இலை தெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்து தெரிந்த புகல்மறவர்”
என்று கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதன் படைச் சிறப்பைக் கூறி அப் படையால் பகைவரை வென்ற திறத்தினையும் பிற சிறப்பியல்புகளையும் பின்னர்க் கூறுகின்றார். இப் படையின் சிறப்பினை அடுத்த பாட்டினும் நன்கு காட்டுகிறார்.
சிற்றரசனாகிய அதிகமான் நெடுமானஞ்சியின் படையின் வளத்தையும் செயலையும் அவன் வீரச்