பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தமிழ் இன்பம்


நலம் வாய்ந்த தூதுவரை அவர்பால் அனுப்பி நீதிபெற முயன்றார்கள். இவ்வாறு வெம்போர் விலக்கும் விழுமிய கருத்துடன் வேற்றரசிடம் தூது செல்லும் அறிஞரை அவமதிப்பதும் துன்புறுத்துவதும் ஆகாவென்று அரச நீதி முறையிடுகின்றது. அயோத்தி மன்னனுடைய தூதனாய் இலங்கை மாநகருக்குச் சென்ற அனுமன்மீது சீற்றமுற்று, அவனைச் சிதைக்கக் கருதிய அரக்கு மன்னனை நோக்கி, அறிவு வாய்ந்த வீடணன்,

“மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் துாய்தன் றாம்என
ஏதுவிற் சிறந்தன எடுத்துக் காட்டினான்”

என்று கவியரசராகிய கம்பர் கூறுமாற்றால், தூதரைக் கொல்லும் பாவம், மாதரைக் கொல்லும் மாபெரும் பாவத்தை ஒப்பதாகும் என்பது நன்கு விளங்குகின்றது. இவ்வாறு தூது போக்கியும் நேர்மை எய்தாத நிலையிலேயே, அருள் நிறைந்த அரசர், வேறு வகையின்றி வெம்போர் புரிவார்கள்.

மாற்றரசர், செந்நெறி விலகி, சீர் முறை தவறிப் புன்மையே புரியினும், அவரது அடாத செய்கையைப் பொறுத்து, இயன்ற வரையில் போரைத் தடுக்க முயல்வதே அறம் திறம்பாத அரசர் செயலாகும். இத்தகைய பெருமை, அயோத்தி அண்ணலாகிய இராமனிடமும் குருகுல முதல்வனாய தருமனிடமும் தலைசிறந்து விளங்கிற்று. தாயின் மொழியைத் தலைக்கொண்டு, நாடு துறந்து, காடு புகுந்த இராமனுடைய காதல் மனையாளை, இலங்கை வேந்தன் வஞ்சனையால்