பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34. பாரதப் பண்பாடு[1]

பழம் பெருமை வாய்ந்தது பாரதநாடு. வடக்கே இமயமலை முதல் தெற்கே குமரி முனை வரையுள்ள இப்பரந்த நாட்டிலே மொழிகள் பல உண்டு. மதங்கள் பல உண்டு இனங்கள் பல உண்டு. ஆயினும் பாரதப் பண்பாடு ஒன்றே.

இத்தகைய பண்பாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது தமிழிலக்கியம். பாரத நாட்டிலுள்ள வடமொழிக்கும் தென்மொழிக்கும் எந்நாளும் பிணக்கமில்லை. இரு மொழிகளும் இறைவன் அருளால் தோன்றின; ஆன்றோர் சேவையால் சிறந்தன; இம்மை இன்பமும் மறுமையின்பமும் தருவன ஆதலால், "இரு மொழியும் நிகர் என்னும் இதற்கு ஐயமுளதேயோ" என்று பாடினார் வடநூற் கடலையும், தென்னூற் கடலையும் நிலைகண்டு உணர்ந்த சிவஞான முனிவர்.

வட நாட்டிலும் தென்னாட்டிலும் மதுரை என்னும் பெயருடைய திருநகரம் உண்டு. வடமதுரையில் அவதரித்தார் கண்ணபிரான்; தென் மதுரையில் புகழ் பெற்றார் திருவள்ளுவர். கண்ணன் அருளிய கீதையும், வள்ளுவர் இயற்றிய குறளும், உலகம் போற்றும் உயரிய ஞான நூல்கள். 'இவ்விரண்டையும் அச்சாக உடையது பாரத ஞானரதம்' என்னும் கருத்தை அமைத்துப் பாடினார் ஒரு பழங்கவிஞர்.


  1. ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு எழுதப்பட்டது.