பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬. அரசியல் சீர் வாய்ந்தார் ! (1)

கல்லூரித்தலைவரை நான்
    கேட்கின்றேன் கனிதமிழின்
        பேரைச் சொன்னால்
சொல்லூறிப் போகாதோ?
    வாயூறிப் போகாதோ!
        தூய தமிழ்க்கு
வல்லூறாய் வாய்த்தீரோ?
    வளம்செய்யும் எண்ணமெனில்,
        நீர் பிறந்த
நல்லூரின் நன்மொழியால்
    அல்லாது நடந்திடுமோ
        நவில்வீர் இன்றே. 26

வரிப்பணத்தை வழங்கிடுவோர்
    வாய்ப்பளிக்க முந்திடுவோர்
        தமிழர் அன்றோ?
இருப்புறுநும் அலுவலுக்கும்
    யாரையா வேர்? தமிழை
        மறப்ப துண்டோ ?
நரிப்பிணத்தை நரியுந்தின்
     னாதென்ப தறியீரோ?
         நம்மா னத்தை
எரிப்பதற்குத் திருவுளமோ?
    எழிற்பள்ளிக் கணக்காயர்
         தலைமையோரே. 27

தமிழ்நாட்டின் உப்பைத்தின்
    றீரன்றோ கணக்காயர்
       தந்தை மாரே!
தமிழ்நாட்டில் தமிழர்களின்
    தன்னுணர்வு நாட்டுவதைத்
       தவிர்ப்பீ ராயின்
உமிழாதோ, வருத்தாதோ
    உம்மையே உம்மருமை
       உள்ளத் சான்றே?
அமுதூட்ட நஞ்சூட்டி
    அகமகிழும் தாயுண்டோ
       அருமைச் சேய்க்கே? 28