பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழியக்கம்

கடவுள்வெறி சமயவெறி
    கன்னல் நிகர் தமிழுக்கு
        நோய்நோய் நோயே!
இடைவந்த சாதி எனும்
    இடர் ஒழிந்தால் ஆள்பவள் நம்
        தாய்தாய் தாயே!
கடல் போலும் எழுக! கடல்
    முழக்கம்போல் கழறிடுக !
        தமிழ்வாழ் கென்று!
கெடல் எங்கே தமிழின் நலம் ?
    அங்கெல்லாம் தலையிட்டுக்
        கிளர்ச்சி செய்க! 119

விழிப்போரே நிலைகாண்பார் !
    விதைப்போரே அறுத்திடுவார்
        களை காண் டோறும்
அழிப்போரே அறஞ்செய்வார் !
    அறிந்தோரே உயர்ந்திடுவார்!
        ஆதல் ஆர்வம்
செழிப்போரே, இளைஞர்களே,
    தென்னாட்டுச் சிங்கங்கள்!
        எழுக! நம்தாய்
மொழிப்போரே வேண்டுவது
    தொடக்கஞ்செய் வீர்வெல்வீர்
        மொழிப்போர் வெல்க! 120