பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

221


1970களிலும் இப்படி அநேகம் பத்திரிகைகள் வந்துள்ளன. ஜயந்தி என்று ஒரு மாத இதழ் ஆசிரியர் : நெ. சி. சாம்பமூர்த்தி. ‘ஆனந்த விகடன்‘ அளவில் வந்து கொண்டிருந்தது. 1972 செப்டம்பரில் தொடங்கி, 1977 ஏப்ரல் வரை 46 இதழ்கள் வெளிவந்துள்ளன. நடுநிலை இலக்கிய இதழ் ஆன ஜயந்தியில் கவிதைகள், கதைகள், இலக்கியச் சிந்தனைகள், புத்தகத் திறனாய்வுக் கட்டுரைகள் பிரசுரமாயின.

ராஜபாளையம் எழுத்தாளர்கள் அனைவரும்— கொ. மா. கோதண்டம், மு. கு. ஜகந்நாத ராஜா, கொ. ச. பலராமன், பூ. அ. துரைராஜா, இரா. கதைப்பித்தன்— ஜயந்தியில் எழுதினார்கள். சிவசு, இளசை அருணா போன்றவர்களும் எழுதினார்கள். வல்லிக்கண்ணன், நீல. பத்மநாபன், நாஞ்சில் நாடன் படைப்புகளையும் ஜயந்தி பிரசுரித்திருக்கிறது. பிறமொழி இலக்கியங்களை (மலையாளம், தெலுங்கு ) சேர்ந்த கதைகளின் மொழி பெயர்ப்புகளும் இதில் வந்தன.

கற்சிலை என்றொரு மாதமிருமுறை, 1973 ஜனவரியில் ஆரம்பித்து 1974 மே வரை வந்திருக்கிறது. ஆசிரியர்— கு. பரமசிவம்.

எழுத்தாளர் கு. பரமசிவம் படைப்பாளி விந்தனின் நெருங்கிய நண்பர். விந்தன் பற்றிய தொகுப்பு நூல் ஒன்றைத் தயாரித்து வெளியிட்ட இவர் எழுத்தாளர் விந்தனின் வாழ்க்கை வரலாற்றை நல்ல முறையில் எழுதியிருக்கிறார். இது 1980களின் சமாச்சாரம்.

கற்சிலை சாதாரணப் பத்திரிகையாக வந்துள்ளது. சினிமா பற்றிய தகவல்கள், அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் சம்பந்தமான கருத்துக்கள், சுமார் ரகக் கதைகள், கவிதைகளை வெளியிட்டுள்ள இப் பத்திரிகை நல்ல, ‘சோவியத் சிறப்புக் கட்டுரைகள்‘— இலக்கியம் சம்பந்தமானவை—பலவற்றை அச்சிட்டிருக்கிறது. மறைந்த கவிஞர் தமிழ் ஒளியின் பெருமையை அடிக்கடி அறிவுறுத்தியது (15-வது இதழுக்குப் பிறகு சினிமா விஷயங்கள் கைவிடப்பட்டன .

தமிழ் ஒளியின் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றை மறுபிரகரம் செய்த கற்சிலை, தனது 17—வது இதழை தமிழ் ஒளியின் பொன்விழாச் சிறப்பிதழ் ஆகத் தயாரித்துள்ளது. இந்த இதழுக்குப் பிறகு, பத்திரிகையின் சிறப்பாசிரியர் உமா மகேசுவரன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

உமா மகேசுவரன் அதற்குப் பல மாதங்கள் முன்பிருந்தே விறுவிறுப்பான நடையில் சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதி வந்திருக்கிறார்.