பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

வல்லிக்கண்ணன்


புதுமைகள் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஸில்வியா என்ற பெயரில் ஒருவர் புதுமையான இலக்கிய உத்திகளில் சிறுகதை எழுதுகிறார். ப்ரக்ஞை, நனவு ஓட்டம், சிலசில சுவாரஸ்யமான விஷயங்களை நினைப்பது என்ற தன்மைகளில் ’ஸ்வப்ன சிநேகிதா!’ எனும் அவரது முதல் இதழ் கதை பற்றி அவர் எழுதியிருக்கும் முன்னுரை ரசமான விதத்தில் இதைத் தெளிவுபடுத்துகிறது.

’முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்தக் கதை அந்நியக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஓர் ’ஞாபகக் கதை’. ஞாபகக் கதை என்றவுடன் மலையாள சினிமாவில் ப்ளாஷ்பேக் என்ற பெயரில் முதலில் குண்டு குண்டாய் பிரமீளாவைக் காட்டிவிட்டு அடுத்த சீனில் அந்தக் குண்டு மாறாமல் பிரமீளாவைத் தாவணியில் அடக்கி, பிரா அவிழ்ப்பார்களே, அந்த சமாச்சாரம் என்று நினைத்துவிடாதீர்கள். ஞாபகம் என்பது இக் கதையில் ஒரு பெண்ணின் ஞாபகம். வயதான பிரக்ஞை. இதன் பெக்யூலியாரிட்டி என்னவென்றால் சில கடந்த கால சாக்லேட் விஷயங்களை பிரக்ஞை பெரிதுபடுத்தும். சில பாவக்காய் விஷயங்களைச் சொல்லவே சொல்லாது. அல்லது மிகவும் கட்பண்ணி எடிட் பண்ணி டுரிங் டாக்கீஸ் ஃபோர்த் பிரிண்ட் மாதிரி சொல்லும். காலம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மறந்து போகும். இன்னும் எவ்வளவோ கொஞ்சங்கள். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள், பலகீனப்பட்ட பிரக்ஞை சில சமயம் தேதி விஷயங்களில் குழம்பிப் போகும் என்பதனையும் ஞாபகம் வைத்துக் கொள்வார்களாக’

ரசமாகக் கதை எழுதத் தெரிந்த ஸில்வியா ஒவ்வொரு இதழிலும் தனித்தனி ரகமான கதை எழுதியிருக்கிறார்.

எஸ். டி. எம். புத்தக மதிப்புரை எழுதுகிறார். மிகுந்த படிப்பு அறிவுள்ளவர் என்பது இவரது கட்டுரைகளில் வெளிப்படுகிறது. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள், எம். ஜி. சுரேஷின் தாஜ்மகாலுக்குள் சில எலும்புக் கூடுகள், தேவதேவன் கவிதைகள் மாற்றப்படாத வீடு, கவிதை பற்றி ஆத்மாநாம் ஆகிய புத்தகங்களின் மதிப்புரைகள் ‘ராகம்’ இதழ்களில் வந்துள்ளன.

‘கலியுகம்’ என்ற கடைசிப் பக்கம்—பா. அரசுக்கண்ணன் எழுதுவது—இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது.