அகத்திணைப் புலவர்கள்
345
தலைவியும் காமவுணர்வு மிக்கவள். தலைவனது கைகடந்த காமத்தை ஏற்கும் நற்றுணையாகத் தோன்றுகின்றாள். காதலன் இரவில் வந்துபோவதைத் தலைவியும் தோழியும் விரும்புவதில்லை என்றே அகப்புலவர் பலர் பாடுவது வழக்கம். இரவு வருவானைப் பகல்வரினும் வருக என்று மாற்றம் காட்டுவர் தலைவியும் தோழியும். பரணரின் அகத் தலைவியோ இரவுக் குறிக்கு அஞ்சியவள் அல்லள். தலைவன் இரவு வரும் நெறிக்கும் அச்சம் உற்றவள் அல்லள் எனவே களவுத் காதலர் இருவரும் ஒத்த காமத்தினராக விளங்குகின்றனர்.
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து
வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து
வில்வகுப்புற்ற நல்வாங்கு குடச்சூல்
அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பிற் சான்ற பெரியள்
"நடு யாமத்துப் பெய்யும் மழையைப் பொருட்படுத்தவில்லை.மேலும் மழை மறைந்து வருவதற்குத் துணையாயிற்று. வரும் போது இடையே மலர் பறித்துச் சூடிவருகின்றாள். சிலம்பு ஒசை செய்யாதபடி அதனைக் கட்டிவிட்டாள். ஊரும் வீடும் அயர்ந்து தூங்கும்வரை விழித்திருந்து வந்த் காதலனைக் கண்டு கூடி மகிழ்ந்து,விழித்துக்கொள்ளும் முன்னாகத் திரும்பி வந்து படுத்துக்கொள்கின்றாள்” எனின் பரணரின் களவுக் குமரிக்கு இருக்கும் காதலார்வமும் துணிச்சலும் ஒட்பமும் எல்லாம் மருளத் தக்கவை. ஆதலின்,மிகப்பெரியவள் என்று காதலன் தன் நெஞ்சுக்குக் கற்பிக்கின்றான்.
பரத்தையின் வஞ்சினம்
மேற்கண்டாங்குக் களவுத் தலைமக்களைக் கர்மம் ஒத்த காதலர் களாகப் புனைந்து காட்டும் பரணர் கற்புத் தலைமக்களை ஒரளவு முரணிய வாழ்க்கையர்களாகக் காட்டுவர். தலைவன் தண்டாப் பரத்தனாகத் திரிகின்றான். அவனது பரத்த வேட்டம் ஒரு பரத்தைக்குக் கூடப் பிடிக்கவில்லை. "மார்பு தருகல்லாய் பிறன் ஆயினை’ (அகம், 366) என்று அவள் தூற்றுகின்றாள். தலைவனது புதுப்புதுப் பரத்தை உறவிற்குத் துணையாக ஒரு விறலி இருந்தாள் என்ற அரிய கருத்தை, “நாளை மகட்கொடை எதிர்ந்த மறங்கெழு பெண்டே' (நற். 310) என்ற அடியால் அறியலாம். அவனது பெரும் பரத்தமையால், தலைவியை எதிர்த்து வஞ்சினம் மொழியும் துணி ஒரு பரத்தைக்கு வந்து விட்டதுகாண்.