பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

தமிழ் மொழி - இலக்கிய வரலாறு

மநுநீதிச் சோழனைப்போல நீதி முறையை நிலைநாட்டத் தன் மகனைக் கொன்றான், எல்லாச் சமயங்களையும் சமமாக மதித்தான் என்று பெளத்தர்கள் எழுதி வைத்துள்ள வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

ஏறத்தாழக் கி. மு. 103 முதல் கி. மு. 89 வரையில் இலங்கையில் மீண்டும் தமிழர் ஆட்சி ஏற்பட்டது. புலஹத்தன், பாகியன், பனைய மாறன், பிளைய மாறன், தாட்திகன் என்ற தமிழர் ஐவரும் இலங்கையை ஆண்டனர். பின்னர்க் கி. பி. 43 முதல் 52 வரையில் சந்தமுக சிவன் என்ற சிங்கள அரசன் நாட்டை ஆண்டான். அவன் தமிழதேவி என்ற தமிழரசன் மகளை மணந்தான். அவன் மகனும் ஒரு தமிழரசன் மகளை மணந்து கொண்டான்.

வசபன் என்ற சிங்கள வேந்தன் கி. பி. 67 முதல் 111 வரை அரசாண்டான். அவன் சோழன் வலிமை பெறுவதை அறிந்து இலங்கையில் தக்க பாதுகாப்புகளை மேற்கொண்டான். வசபன் மகனான வங்கநாசிகதிஸ்ஸன் (கி பி. 111-114) காலத்தில் சோழ அரசன் (கரிகாலன்?) படையெடுப்பு இலங்கை மீது நடைபெற்றது. சோழன் பன்னீராயிரம் சிங்களவரைச் சிறை செய்து சோணாட்டுக்குக் கொண்டு சென்றான்; அவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரையிடு வித்தான். [1]

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற புண்ணிய குமாரனுடைய மேல்பாட்டுச் செப்பேடுகளிலும், கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும், வீரராசேந்திர சோழனுடைய கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக்கரை அமைத்து அதன் வெள்ளத்தைத் தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை கூறப்பட்டுள்ளது. ஆதித்தன் முதற் பராந்தகன் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் சில, காவிரிக் கரையைக் 'கரிகாலக்கரை' என்று கூறுகின்றன. இக்கல்வெட்டுகளால் அவ்வேந்தர்


  1. 45. Ibid pp. 175–182.